இருந்தாரே! இப்பொழுது தலையில் லேசாக வழுக்கை விழுந்து விட்டதே!' என்று மனத்துக்குள் நினைத்துக்கொண்டாள் சரஸ்வதி.
'குழந்தை நன்றாக வளர்ந்துவிட்டாள். சமீபத்தில் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த ஸரஸ்வதியின் புகைப் படத்தைப் பார்த்தே பரவசமாகி இருந்தேனே. நேரிலே பாயத்தால் புகைப்படம் மோசம் என்றுதான் சொல்ல வேண்டும். 'மூக்கும், விழியும், அடக்கமும், மரியாதையுமாக என் ஸரஸ்வதி எப்படி இருக்கிறாள்! 'அவள்' இல்லையே இந்த ரத்தினத்தைக் கண்டு மகிழ்வதற்கு!' என்று தகப்பனார் மகளைப் பார்த்துச் சந்தோஷமும், மனைவி இதைக்கண்டு அநுபவிப்பதற்கு இல்லையே என்று துக்கமும் எய்தினார். கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் துளிர்த்த நீரை அடக்குவதற்கு வெகு பிரயாசைப்பட்டார்.
அருகில் உட்கார்ந்திருந்த நண்பர் ஏறக்குறைய ஸரஸ்வதியின் தகப்பனார் வயதை உடையவர். அவர் பழகுகிற முறையிலிருந்து ஆப்த நண்பர் என்பது சொல்லாமலேயே விளங்கிவிட் டது. நட்பிலே பல தரங்கள் உண்டல்லவா? சிலர் தங்களுடைய வேலைகள் நடக்க வேண்டுமானால் மிகவும் நட்புரிமை பாராட்டுவார்கள். "உங்களைப்போல உண்டா?" என்பார்கள். அவர்கள் வேலை முடிந்து விட்டால் பிறகு, " இருக்கிறாயா?" என்று கேட்பதற்குக்கூட அவர்களுக்கு வாய்வலித்துப்போகும்! சில நண்பர்கள் குழைந்து குழைந்து நண்பர்களிடம் வேலை வாங்கிக் கொள்வார்கள். தாங்கள் ஏதாவது செய்ய வேண்டுமானால் தூர விலகிவிடுவார்கள். 'ரெயில் சிநேகம்' என்று குறிப்பிடுகிறோம். ரெயிலில் சில மணி நேரங்கள் சந்தித்துப் பிரிகிறவர்களை அப்படிச் சொல்லுகிறோம். அருகிலேயே இருப்பார்கள் சில நண்பர்கள். அவர்களுடன் நாம் எவ்வளவு நட்புக்கொண்டு பழகினாலும் அவர்கள் விலகியே செல்வார்கள்.
பாரதத்திலே கர்ணனும், துரியோதனனும் பழகி வளர்த்த நட்பு மிகவும் சிறந்தது. உண்மையான நட்பு எந்த விதமான கட்டு திட்டங்களுக்கும் உட்பட்டதல்ல. பணக்காரன், ஏழை என்று வித்தியாசம் பாராட்ட அதில் இடம் இல்லை. இந்தக் காலத்திலே சிலர் தாங்கள் சிநேகம் பாராட்டுகிறவர்களின் சொத்து, அந்தஸ்து முதலியவைகளை ஆராய்ந்து பழகுகின்றனர். கண்ணனுக்கும், ஏழைக் குசேலருக்கும் அந்தஸ்தில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசந்தான். இருந்தபோதிலும், அந்த தூய நட்பைப்பற்றிப் படிக்கும் போதெல்லாம் மனம் உருகிக் கண்ணீர் பெருகி விடுகிறது. இந்த மாதிரியே ஸரஸ்வதியின் தகப்பனாரும், அவருடன் கூடவந்த நண்பர் கோபால தாஸரும் அந்தஸ்தில் மிகுந்த வித்தியாசம் உடையவர்கள். பால்யத்தில் இருவரும் விஞ்ஞானக் கல்வி பயில ஒன்றாக மைசூர் ராஜ்யத்தில் வசித்தவர்கள். ஸரஸ்வதியின் தகப்பனார் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். பாஷை தெரியாத கன்னட ராஜ்யத்தில் கோபால தாஸர் அவருக்குச் சிறந்த நண்பராக விளங்கினார். கல்விப் பயிற்சிக்கு அப்புறம் ஸரஸ்வதியின் தகப்பனாருக்கு அதிருஷ்ட வசமாக உயர் பதவி கிட்டியது. கோபால