ரகுபதி 'கட கட' வென்று சிரித்து விட்டான். அவன் இம்மாதிரி மனம் விட்டுச் சிரித்து எவ்வளவோ காலம் ஆயிற்று. கிணற்றிலிருந்து ஜலம் இழுத்துக் கைகால்களை அலம்பிக் கொண்டே , ”அது போகட்டும். காலையில் எழுந்தவுடன் துளசி மாடத்துக்குக் கோலம் போடுவது. அதன் பிறகு மாட்டிற்குத் தீனி வைத்துப் பால் கறப்பது. அதன் பிறகு?" என்று அவளைக் கேட்டான் ரகுபதி.
"அதன் பிறகு ஏரிக்குப் போய்த் துணிகளைத் துவைத்துக் குளிப்பது" என்று ஒய்யாரமாகப் பதிலளித்தாள் தங்கம்.
"இப்படியே நாள் பூராவும் ஒரு வேலை மாற்றி இன்னொன்று என்று செய்து கொண்டிருப்பாயாக்கும்! வேறு பொழுது போக்கு எதுவும் இல்லையா?" என்று மேலும் கேட்டான் ரகுபதி.
தங்கம் அவனுக்கு மறுமொழி கூறுவதற்கு முன்பே உள்ளிருந்து அலமு அவளைக் கூப்பிட்டாள். பால் பாத்திரத்துடன் உள்ளே சென்ற தங்கம், தட்டில் இட்லிகளுடனும், கையில் மணக்கும் காப்பியுடனும் கூடத்துக்கு வந்து. ரகுபதியின் முன்பு அவைகளை வைத்துவிட்டுத் தாழ்வாரத்திலிருந்த துணிகளை மூட்டையாகக் கட்டி எடுத்துக் கொண்டாள். இடுப்பில் குடத்தை ஒய்யாரமாகச் சாய்த்து வைத்துக்கொண்டு, "ஏரிக்குப் போய்விட்டு வருகிறேன், அத்தான்! வந்த பிறகு அதற்கு அடுத்தாற்போல் என்ன வேலை என்பதையும் சொல்லுகிறேன்" என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள்.
சூரியன் வானத்தில் மேலே வந்து விட்டான். சமையலறை யிலிருந்து கீரைக் குழம்பு 'கம கம' வென்று மணக்க ஆரம்பித்தது. வெறுமனே கூடத்தைச் சுற்றிச் சுற்றி வர ரகுபதிக்குப் பிடிக்கவில்லை. ஆகவே, 'வெளியே போய் வரலாம்' என்று கிளம்பி, அலமுவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் ஓலை வேய்ந்த குடிசைகள். அவைகளை அடுத்து மரகத வண்ணத்தில் வயல் வெளிகள். அவைகளில் படிந்து 'சல சல" வென்று ஓடும் நீரின் ஓசை. ஈர மண்ணிலிருந்து எழும் ஒருவித வாசனை. வழக்கமாக நகரவாசிகளில் பலர் அத்தர், சந்தணத் தின் மணத்தையே உணர்ந்தவர்கள். சுக போகத்திலேயே திளைப்பவர்கள். காலில் மண் ஒட்டிக் கொண்டால் முகத்தைச் சுளிப்பவர்கள்: இவர்களுக்கு, முழங்கால்கள் வரையில் சேற்றில் அழுந்தப் பாடுபடும் ஏழைக் குடியானவர்களைப்பற்றிச் சிந்திப்பதற்கே பொழுது இருப்பதில்லை. ஈர மண்ணிலிருந்து எழும் வாசனை யை நுகர்ந்து அநுபவிப்பதற்கும் பாக்கியம் செய்ய வில்லை
ரகுபதி சிறிது தடுமாற்றத்துடனேயே வரப்புகளின் மீது நடந்து சென்றான். அங்கே மனத்துக்கு ரம்யமான காட்சி ஒன்றைக் கண்டான். இசையும், கலையும். ஆடலும், பாடலும் நகரங்களில்