மட்டும் இல்லை. சேறும், சகதியும், உழைப்பும், பலனும் நிறைந்திருக்கும் கிராமங்களிலும் அவை இருக்கின்றன என்பதை ரகுபதி உணர்ந்து கொண்டான். உடல் கட்டுடன் விளங்கும் இளமங்கை ஒருத்தி வயல்களுக்கு மடை கட்டிக்கொண்டிருந்தாள். சற்று எட்டி, ஏற்றக் கிணற்றிலிருந்து ஓர் ஆடவன் ஏற்றம் இறைத்துக்கொண்டே,
"வண்டி கட்டி மாடு கட்டி- ஏலேலமடி ஏலம்
மீனாக்ஷி அம்மை கூண்டு கட்டி - ஏலேலமடி ஏலம்"
என்று உர்த்த குரலில் பாட ஆரம்பித்தான். தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த பெண், கணவனை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு கண்களில் காதல் கனல் வீச அவனைப் பார்த்துக் கொண்டே, ' அட! உனக்குத்தான் பாடத் தெரியுமோ?' என்கிற பாவனையில் தலையை அசைத்துவிட்டு,
"கூண்டுக்குள்ளே போற பெண்ணே - ஏலேலமடி ஏலம்
அட! கூப்பிட்டாலும் கேட்கலையோ? - ஏலேலமடி ஏலம்"
என்று சவால் விடுப்பது போல் தீங்குரலில் பாடினாள்.
ரகுபதி அப்படியே அயர்ந்துவிட்டான். பாட்டிலேதான் என்ன இனிமை! எவ்வளவு அர்த்த பாவம்! மாட்டு வண்டி கட்டிக் கொண்டு காதலியும். காதலனும் எங்கோ பயணப்படு கிறார்கள். சாதாரண வண்டியல்ல. மதுரையம்பதியில் அரசு செலுத்தும் அங்கயற்கண்ணியின் வண்டி, ஸ்ரீ மீனாட்சியின் கூண்டு வண்டி!
அவன் உள்ளத்திலிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. மெதுவாக ஒன்றும் தோன்றாமல் மேலே நடக்க ஆரம்பித்தான் அவன். எதிரில் தங்கம் குளித்துவிட்டு வந்து கொண்டிருந்தாள். உடம்பிலே ஈரப்புடைவை. தோளில் துவைத்த துணிகளின் சுமை. இடுப்பில் நீர் வழியும் குடம். தேர்ந்த எழுத்தாளனாக இருந்தால், அவளைக் குறைந்த பட்சம் இரண்டு பக்கங்களாவது வர்ணித்து விடுவான்? வார்த்தைகளுக்கும், வர்ணனைகளுக்கும் எட்டாத அழகு அது. ஆகவே, அவன் வாயடைத்து அவளுடன் வீடு திரும்பி வந்து சேர்ந்தான்.
------------
தொடரும்