Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 30 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 30. சாவித்திரியின் உள்ளம்
தீபாவளி பட்சணத்திற்காக மாவு அரைப்பதற்குத் தகர டப்பாக்களில் சாமான்களை நிரப்பிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் மங்களம். தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை வரும் வீட்டில் நிலவ வேண்டிய உற்சாகம் அங்கே காணோம். தீபாவளி அழைப்பு அனுப்பியதைப்பற்றிச் சந்துருவும், சீதாவும், மங்களமும் மட்டும் அறிந்திருந்தனர். முன் ஜாக்கிரதையாக விருந்துக்கு வேண்டிய சாமான்களை வாங்கி வைத்துவிட்டாள் மங்களம்.
"வருஷா வருஷம் வருகிற பண்டிகைதானே? மாப்பிள்ளை வந்து சவரணையாகத் தலை தீபாவளி கொண்டாடுகிறது பாழாகத் தான் போகிறது! எதற்கு இப்படி ஒரேயடியாகச் சாமான்களை வாங்கி நிரப்பி வைத்திருக்கிறாயாம்?" என்று பாட்டி மங்களத்தைக் கேட்டாள். பாட்டியின் வார்த்தைகள் மங்களத்துக்குச் சுரீரென்று தைத்தன. “எதையாவது அச்சான்யமாகச் சொல்லிக்கொண்டு இருப்பதுதான் இந்தக் கிழத்துக்கு வேலை. வீட்டைச் சுற்றிச் சுற்றிவந்து. 'அது எதற்கு; இது என்ன?' என்று ஓயாமல் கேட்டுத்தான் என்ன பலனை அடையப் போகிறாளோ?" என்று மனத்துக்குள் மாமியாரை வெறுத்துக் கொண்டாள்.
தீபாவளி நெருங்கிவிட்டது என்பதற்கு அறிகுறியாக அவ்வப்போது வெடிகளின் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. புடைவைக் கடைகளில் கூட்டம் நெரிந்தது. அசல் நெய்யுடன் மட்ட நெய்யைக் கலந்து புத்துருக்கு நெய் என்று வியாபாரிகள் பீற்றிக் கொண்டனர். பட்டாசுக் கடைகளில் சிறுவர் சிறுமியரின் கூட்டம். குடும்பத் தலைவருக்கு ஒரே தலைவலி, எப்படி ' பட்ஜெட்'டைச் சமாளிக்கப் போகிறோம் என்று.
குதூகலம் நிரம்பியிருக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துச் சாவித்திரி பெருமூச்செறிந்தாள். 'சௌம்யமான மனத்தைப் படைத்தவர், ஸ்ரீராமர். குற்றமுள்ளவரிடத்தும் நன்மையைச் செய்கிறவர். நன்றியுள்ளவர். சத்தியம் தவறாதவர்' என்றெல்லாம் வால்மீகி ராமாயணத்தில் வரும் வர்ணனையைச் சீதா உரக்கப் படித்துக் கொண்டிருப்பதைச் சாவித்திரி கேட்டாள். கவியின் அமர சிருஷ்டியாகிய ஸ்ரீ ராமசந்திரனின் கல்யாண குணங்களைக் கேட்டவுடன் சாவித்திரியின் உள்ளம் பாகாய் உருகியது. சிறு விஷயத்துக்காக ஏற்பட்ட இவ்வளவு மனஸ்தாபத்தையும், அதைத் தீர்ப்பதற்குத் தெரியாமல் தான் படும் அவஸ்தையையும் நினைத்து அவள் மனம் வருந்தியது. ரகுபதி உயர்ந்த குணங்களைப் படைத்தவன், ஏதோ சில விஷயங்களில் தவிர, பிறர் மனத்தை நோக வைக்கும் குணம் அவனிடமில்லை. தான் செய்த குற்றத்தை உணர்ந்து அவளிடம் நேராகத் தைரியமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறான். அசட்டுக் கௌரவம் என்பது அவனிடம் லவலேசமும் இல்லை. இத்தகைய குணவானைக் கணவனாக அடைந்தும் அவனிடம் ஒத்து வாழ முடியாமல் போனது எதனால் என்று சாவித்திரி