சாதாரணப் பெண்ணாகிய எனக்கு இல்லை" என்றாள் அவள்.
சிறிது நேரத்துக்கெல்லாம் வான வெளியில் ஊர்ந்து செலலும் விமானத்தைப் பார்த்துக்கொண்டே நின்றாள் ஸரஸ்வதி. 'அப்பா வந்தார். அவருடன் ஒரு வார காலம் பொழுது சென்றதே தெரியாமல் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தோம். அத்தானும், சாவித்திரியும் தீபாவளி முடிந்து ஊருக்குத் திரும்பி விடுவார்கள். அத்தையும் நாட்டுப் பெண்ணைப்பற்றிய களிப்பில் என்னை மறந்துபோய்விடுவாள்' என்று சிந்தனை படர்ந்து சென்றது. இவ்வளவு பெரிய உலகில் தான் தனியாக நிற்பதாக ஒருவித பிரமை அவளுக்கு ஏற் பட்டது.
"குழந்தை! வீட்டிற்குப் போகலாமா?" என்று கோபால தாஸர் அவளை அழைத்தபோது தான் அவள் சுய உணர்வை அடைந்தாள். இருவரும் நதிக்கரை ஓரமாகவே நடந்தார்கள். அடிக்கடி ஸரஸ்வதி பெருமூச்சுவிடுவதையும், கண்களைத் துடைத்துக் கொள்வதையும் கவனித்த நண்பர், ”ஏனம்மா! வருத்தப்படுகிறாயா என்ன? அன்று எனக்குப் பலமாக உபதேசித்த நீயா இப்படிக் கண்ணீர் விடுவது? வீட்டிற்குப் போய் நான் எழுதிய 'குழலோசை' என்கிற கவிதையைப் படித்துச் சொல்கிறேன். கேட்டு ஆறுதல் அடையலாம். வா அம்மா!" என்று அன்புடன் கோபால தாஸர் அழைத்தார் ஸரஸ்வதியை.
வீட்டை அடைந்ததும் அன்று காலைத் தபாலில் கடிதம் ஒன்று வந்திருந்தது. ரகுபதி கிராமத்திலிருந்து எழுதிய கடிதம் அது. பொழுது விடிந்தால் தீபாவளி. மனைவியின் வீட்டிற்குச் செல்லாமல், கிராமத்தில் அத்தான் என்ன செய்கிறான் என்று ஆச்சரியம் அடைந்தாள் ஸரஸ்வதி. உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்துப் படித்தாள். அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. சிறிது முன்பு தகப்பனாரைப் பிரிந்ததற்கு வருந்திய ஸரஸ்வதி, இப்பொழுது அத்தானின் போக்கைக் கண்டு வருந்தினாள். குழலோசைக் கவிதைப் புஸ்தகத்தை எடுத்து வந்த கோபால தாஸர் ஸரஸ்வதியின் சிவந்த முகத்தைக் கண்டு பயந்து விட்டார். கையில் பிரித்த கடிதத்துடன் உட்கார்ந்திருந்த அவளைப் பார்த்ததும் காவியங்களில் தோன்றும் கண்ணகியும், திரௌபதியும் அவர் அகக்கண் முன்பு காட்சி அளித்தனர்.
“ என்னம்மா, விஷயம்?" என்று கேட்டார் அவர்,
"இது ஒரு பெரிய ராமாயணம் மாமா. ஆதியோடு அந்தமாக இதைச் சொல்லி முடியாது. என்னுடைய அத்தான் இருக்கிறானே அவன் மனைவியுடன் தீபாவளி கொண்டாட வில்லை. இரண்டுங்கெட்டானாக யார் வீட்டிலேயோ அழைக்காத விருந்தாளியாகப் போய் உட்கார்ந்திருக்கிறான். மனிதன் வாழ்க்கையில் ஏமாறுவது சகஜந்தான். அதைக் காரணமாக வைத்துக் கொண்டு அவன் ஒழுங்கான பாதையிலிருந்து விலகிச் செல்வது தவறு அல்லவா? மனைவி உதாசீனம் செய்கிறாள் என்றால், கணவன் பதிலுக்கு அவளை உதாசீனம் செய்யவேண்டும் என்பது சரியல்ல" என்று கூறிவிட்டுக் கடிதத்தை மறுபடியும் உரக்கப்