Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 32 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 32. நீச மனோபாவம்
கங்கா ஸ்நானம் செய்துவிட்டுப் பட்டாசு கொளுத்திக் கொண்டிருந்தாள், தங்கம். மத்தாப்பின் சிவப்பு ஒளி அவள் சிவந்த கன்னங்களை மேலும் சிவப்பாகக் காட்டியது: மாங்காய்க்கரை போட்டு ரோஜா வர்ணத்தில் சாதாரண நூல் புடைவையை உடுத்தியிருந்தாள் அவள். ரகுபதிக்கு அப்பொழுது இருந்த தாராளத்தில், சாவித்திரிக்காக அவன் வாங்கி வந்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடைலையைக்கூடத் தங்கத்திடம் எடுத்துக்கொடுத்து விட்டிருப்பான். ஊரிலே அம்மாவுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். அந்தப் பகட்டான சேலையைப் பார்த்தாலே தங்கம் பயந்து போவாள்! ஒரு தடவை அதைப் பெட்டியிலிருந்து அவன் வெளியே எடுத்துக் காண்பித்தபோதே தங்கம், "அப்பா!” என்று கண்களைப் பொத்திக் கொண்டாள். ”அப்படியே கண்ணைப் பறிக்கிறதே, இது!" என்று வேறு சொன்னாள். எல்லோர் வீட்டிலும் கங்கா ஸ்நானம் நடக்கிறது என்பதற்கு அடையாளமாக, கிணற்றிலிருந்து ஜலம் இழுக்கும் போது ராட்டினங்கள் 'நொய், நொய்' என்று சத்தமிட்டன. ஒவ்வொருவர் வீட்டுப் புறக்கடையிலிருந்தும் வெந்நீர் அடுப்புப் புகை சுருள் சுருளாக எழுந்தது. குதித்துக் கொம்மாளம் போட்டுக்கொண்டு குழந்தைகள் பட்டாசு சுட்டனர். தலை தீபாவளி நடக்கும் வீடுகளிலெல்லாம் நாதஸ்வரத்தின் இன்னொலி பரவி இருந்தது. ரகுபதி தெருவிலே நின்று கொண்டு இந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் ஈடுபட்டிருந்தான்.
அவன் அருகில் நின்றிருந்த தங்கம் மத்தாப்பு கொளுத்துவதைத் திடீரென்று நிதுத்திவிட்டுத் எதிர் வீட்டுக்கு ஓடினாள். சிறிது நேரத்துக்கெல்லாம் கையில் செவேல் என்று காணும் ஆரத்தி நீரைக் கொண்டுவந்து தெருக்கோலத்தில் ஊற்றிவிட்டு மறுபடியும் உள்ளே போனாள். மறுபடியும் வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் வெளியே வந்தாள். ரகுபதி சிறிது நேரம் அவளையே உற்றுப் பார்த்தான். பிறகு, "என்ன? காலையில் வரும்படி பிரமாதமாக இருக்கிறது?" என்று கேட்டான்.
தங்கம் கைகளை விரித்துக் காண்பித்தாள். வெற்றிலைப் பாக்கின் நடுவில் வெள்ளி அரை ரூபாய் ’பளபள'வென்று மின்னி யது. புன்சிரிப்புடன், "அவர்கள் வீட்டில் தலை தீபாவளி. மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் ஆரத்தி எடுப்பதற்கு அங்கே யாரும் இல்லை. என்னைக் கூப்பிட்டார்கள். போயிருந்தேன். வரும்படி வந்தது. நீங்கள் தான் தீபாவளிக்கு ஊருக்குப் போகாமலும், என்னையும் அழைத்துப் போகாமலும் ஏமாற்றிவிட்டீர்களே! போங்கள் அத்தான்! சாவித்திரி மன்னி உங்களை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள்?" என்று கேட்டாள் தங்கம்.
ரகுபதி அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அசட்டுப் பிசட்டென்று தீபாவளிக்கு வேட்டகம் போகாமல் கிராமத்தில் வந்து உட்கார்ந்திருப்பது ரகுபதிக்கே ஆச்சரியமாகவும், பயமாகவும்