இருந்தது. ஊரிலே அம்மாவுக்குத் தெரிந்தால் அவனை லேசில் விடமாட்டாள். ஸரஸ்வதியைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. பைத்தியக்காரத்தனமாக அல்லவா அவன் தங்கத்தை வர்ணித்து ஸரஸ்வதிக்குக் கடிதம் போட்டுவிட்டான்? அதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் ஏற்படும்.
”ஸரஸ்வதிக்கு என்ன வேலை? எல்லோரும் பார்த்துச் செய்த கல்யாணந்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதே, அவள் ஓயாமல் தர்மத்தைப்பற்றியும், நியாயத்தைப்பற்றியுந்தான் பேசுவாள். அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தால் வாழ்க்கையில் இன்பம் ஏற்பட்டமாதிரிதான்! 'சர்க்கரை' என்று சீட்டில் எழுதிச் சுவைத்தால் இனிக்குமா, அல்லது சர்க்கரையை அள்ளித் தின்றால் அதன் சுவை தெரியுமா? ’சாவித்திரி, சாவித்திரி' என்று ஜபித்துக் கொண்டிருந்தால் என் வாழ்க்கை இனித்தமாதிரி தான்" என்று ரகுபதி அலுத்துக்கொண்டான்.
பொழுது நன்றாக விடிந்துவிட்டது. எதிர் வீட்டுக் காமரா அறையில் ஓர் அழகிய காட்சியைக் கண்டான் ரகுபதி. இளம் பெண் ஒருத்தி தட்டில் பலகாரங்களும், காப்பியும் வைத்து எடுத்து வருகிறாள். லேசாகத் திறந்திருந்த கதவை அழுத்தி மூடிவிட்டு, அவள் கையிலிருந்த தட்டை வாங்கி மேஜைமீது வைத்து விடுகிறான் கணவன், தட்டிலே நாவில் ஜலம் ஊறச் செய்யும் பலகாரங்கள் இருக்கின்றன. ஆவி பறக்கும் காப்பி ’கமகம' வென்று மணக்கிறது. அவைகளிலெல்லாம் கணவனுக்கு ஒரு விசேஷமும் தென்படவில்லை. பசி ஏப்பக்காரன் முன்பு அல்லவா அவைகளை வைக்கவேண்டும்? பலகாரங்களுக்காகவும், ’ஸ்ட்ராங்' காப்பிக்காகவும் காதங்கடந்து அவன் வந்திருக்க வேண்டியதில்லை. மனைவியின் மெல்லிய கரங்களைப் பற்றித் தன் கைகளுக்குள் சேர்த்துக்கொள்கிறான்.
ரகுபதிக்கு மேலும் தான் அங்கே நிற்பது அசம்பாவிதம் என்று தோன்றியது. அறைக்குள் சென்று உட்கார்ந்து விட்டான். லேசாகத் திறந்திருந்த கதவை நன்றாகத் திறந்து கொண்டு தங்கம் பலகாரத் தட்டுடன் உள்ளே வந்தாள். தட்டைத் தானாகவே மேஜை மீது வைத்தாள். பிறகு, 'காப்பி கொண்டு வருகிறேன்' என்று வெளியே புறப்பட்டாள். ரகுபதி எழுந்தான். இரண்டடி முன்னே சென்றான். தங்கத்தின் புடைவை மேலாப்பு காற்றில் பின்புறம் பறந்து கொண்டிருந்தது. அதைத் தொட்டுவிட்டான். ஆனால், எங்கிருந்தோ ஒரு குரல் கண்டிப்பாக அவனை எச்சரித்தது! மெல்லிய காற்றில் காலையில் ஏரிக்கரையிலிருந்து வந்த குரல் அது.
'லோக நாயகனாகிய ஸ்ரீராமன், ஏகபத்தினி விரதத்தை அனுஷ்டிப்பவன்; சதா சீதையை நினைத்து அவளிடம் மனத்தைச் செலுத்துபவன்; சொன்ன சொல்லைக் கடவா தவன் சத்தியசந்தன்.' இப்படிப்பட்ட ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்' என்று பொருள் செறிந்த கவிதை ஒன்றைப் பாடிக்கொண்டே வயது முதிர்ந்த அந்தணர் ஒருவர் வீதி வழியே வந்து கொண்டிருந்தார்.
தங்கம் காப்பியை எடுத்துக்கொண்டு உள்ளே வரவில்லை. பாடிக்கொண்டு செல்லும்