அன்று பிற்பகல் கூடத்தில் படுத்திருந்த தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். வாஞ்சையுடன் தாயின் கரங்களைப் பிடித்துக்கொண்டு, "ஏனம்மா! தீபாவளிக்கு முன்பு உடம்பு தெம்பாகச் சற்று நடமாடிக்கொண்டிருந்தாயே. மறுபடியும் படுத்துவிட்டாயே!" என்று விசாரித்தான்.
மங்களத்தின் கண்களில் கண்ணீர் பெருகியது.
"ஆமாம் அப்பா! 'மாப்பிள்ளை வருவான், சாவித்திரியை அழைத்துப்போவான்' என்கிற நம்பிக்கையே 'டானிக்' மாதிரி உடம்புக்கு வலுவைத் தந்தது. அவன் வரவில்லை என்றதும் மனம் சோர்ந்துவிட்டது. சந்துரு! இந்த நிலையில் நான் அதிக காலம் இருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது. எனக்கு ஒருவரைப் பற்றியும் கவலையில்லை. சீதா புத்திசாலி. பிறர் சுபாவம் தெரிந்து பழகிக்கொள்வாள். கண்டிப்பாகப் புக்ககத்தில் நல்ல பெயர் வாங்கிவிடுவாள். நல்ல குணமுள்ள பெண்ணாக நீ கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டாயானால் அவள் உன் தகப்பனாரைக் கவனித்துக் கொள்வாள். குடும்பம் செழித்துப் பெருகும்போதே மஞ்சளும், குங்குமமுமாக நான் போகிறதில் எனக்குக் கவலையில்லை. சாவித்திரி வாழாப் பெண்ணாக இருந்து விடுவாளோ என்று என் ஹிருதயம் அலறித் துடிக்கிறது. கணவனிடம் கண்ணை மூடிக்கொண்டு பக்தி செலுத்தும் என் வயிற்றில் இந்தப் பெண் எங்கேயிருந்து வந்து பிறந்தாள் என்று மனம் கிடந்து தவிக்கிறது" என்று நா தழுதழுக்கக் கூறினாள் மங்களம்.
சந்துரு தாயின் கரங்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, ”அம்மா! நீ என்ன செய்யச் சொல்கிறாயோ அப்படிச் செய்கிறேன் அம்மா. ரகுபதியை நேரில் போய்ப் பார்த்துப் பேசுகிறேன். அதற்காக அப்பா என்னைக் கோபித்துக்கொண்டாலும் பரவாயில்லை. ரகுபதியே என்னை மரியாதைக் குறைவாக நடத்தினாலும் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு நன்மை விகாவதற்காக ஆயிரம் பிழைகளைப் பொறுக்கலாம். அம்மா. உன் மனம் குளிர்வதற்காக நான் அவமானம் அடைந்தாலும் பாதக மில்லை. எனக்கு விவரம் தெரிந்த நாட்களாகப் பரம சாதுவாகக் குடும்பத்துக்கே உழைத்து, அதில் காணும் நலன்களைக் கண்டு பெருமைப்படும் உனக்காக நான் இந்தச் சிறு காரியத்தைச் செய்யக்கூடாதா என்ன?" என்றான் உணர்ச்சியுடன்.
காலேஜிலிருந்து திரும்பி வந்த சீதா தமையன் கடைசியாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள். பிறகு அவனைப் பார்த்து.. " அண்ணா ! அத்திம்பேர் ஊரில் இல்லையாம். அவருடைய கிராமத்தில் இருக்கிறாராம். ஸரஸ்வதி மைசூருக்குப் போய் இருக்கிறாளாம். ஊரிலே ஸ்வர்ணம் மாமி மட்டும் இருப்பதாக என் சிநேகிதி ஒருத்தி சொன்னாள்" என்று தெரிவித்தாள்.
மங்களம் ஆவலுடன் சந்துருவின் முகத்தைப் பார்த்தாள். பிறகு அவனைப் பார்த்து. ஸரஸ்வதியின் விலாசம் தெரிந்தாலாவது, நீ அவளுக்காவது ஒரு கடிதம் போடலாம். இந்தக்