(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

காலத்தில் இதிலெல்லாம் தவறு ஒன்றுமில்லையே. விலாசமும் தெரிய வில்லையே. என்ன செய்கிறது இப்போது?" என்று கவலையுடன் கேட்டாள்.

"இனிமேல் நேரில் தான் எல்லா விஷயங்களையும் தீர்க்க வேண்டும் அம்மா. ஸரஸ்வதி இதில் தலையிட்டிருந்தால் இந்த விஷயம் இவ்வளவு முற்றி இருக்காது. அவள் விலகிச் சென்றிருப்பதைக் கவனித்தால் இதில் தலையிட அவளுக்கும் விருப்ப மில்லையோ என்று தோன்றுகிறது. ஆனால், தன் அத்தானின் குடும்பம் ஒழுங்குபடுவதை அவள் விரும்பாமல் இருக்க மாட்டாள். நானே கிராமத்துக்குப் போய் ரகுபதியைப் பார்த்து வருகிறேன்", என்று கூறினான் சந்துரு.

" அப்படித்தான் செய்! ஒருவேளை நீ கிராமத்திலிருந்து. திரும்புவதற்கு முன்பே மைசூரிலிருந்து ஸரஸ்வதி வந்து விட்டாளானால் அவளையும் இங்கு அழைத்து வா. அந்தப் பெண்ணின் முகம் என் மனசைவிட்டு அகலவே மாட்டேன் என்கிறது. கடந்த ஏழெட்டு மாசங்களாகத்தான் அவளை எனக்குத் தெரியும். ஆனால், அவளை நான் எப்பொழுதோ எங்கோ பார்த்த மாதிரியே இருக்கிறதப்பா!" என்றாள் மங்களம்.

"அதான் சொல்லிவிட்டேனே, உனக்காக நான் ரகுபதியைப் போய்ப் பார்த்துச் சமாதானம் பண்ணுகிறேன் என்று. நாம் எல்லாரும் நினைக்கிற மாதிரி ரகுபதி அவ்வளவு முரடன் இல்லை. எப்படியும் உன் பெண்ணும், மாப்பிள்ளையும் ஒன்று சேர்ந்து விட்டார்களானால் எனக்கு என்ன அம்மா தருவாய்?"" என்று சிரித்துக் கொண்டே தாயைப் பார்த்துக் கேட்டான் சந்துரு.

" உனக்குத் தருவதற்கு என்னிடம் என்ன அப்பா இருக்கிறது? பெற்று, வளர்த்து, அறிவு புகட்டிப் பெரியவனாக்குவது வரை என் கடமை தீர்ந்துவிட்டதே. இன்னொன்று பாக்கி இருக்கிறது. நல்ல பெண்ணாகக் கலியாணம் செய்து கொண்டு நீ வாழவேண்டும் என்கிற ஆசியைத்தான் நான் தரமுடியும்!" என்று உருக்கமாகக் கூறினாள் மங்களம்.

சந்துரு வெட்கத்தினால் சிறிது நேரம் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தான். அருகில் கேலிச் சிரிப்புடன் நிற்கும் சீதாவைப் பார்த்து. "என்னவோ சொல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு நிற்கிறாயே சீதா, சொல்லிவிடேன்" என்றான்.

"இந்தப் பகிரங்க ரகசியத்தை நான் தான் சொல்ல வேண்டுமா அம்மா? சாதாரண ஸரஸ்வதியாக அந்த ஸரஸ்வதி இங்கே வருவதை அண்ணா விரும்பவில்லை. உன் நாட்டுப் பெண்ணாகத்தான் வர வேண்டுமாம். இந்த ரகசியத்தைச் சொன்னதற்கு எனக்கு என்ன பரிசு தரப்போகிறாய் அண்ணா?" என்று குறும்புத்தனத்துடன் கேட்டாள் சீதா.

"தெய்வ சங்கல்பம் இருந்தால் நடக்கட்டுமே அப்பா! என்னைப் பொறுத்தவரையில் உன் மகிழ்ச்சி ஒன்றுதான் எனக்கு முக்கியமானது" என்றாள் மங்களம்.

2 comments

  • ஒவ்வொருவர் மனத்தையும் அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார், ஆசிரியர். பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.