(Reading time: 7 - 13 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 36 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 36. கானல் நீர்

விசாலமான ஏரியில் காற்றினால் எழுப்பப்பட்ட சிற்றலைகள் நெளிந்து சுருண்டன. சுரீரென்று வான வீதியில் பவனி வரும் சூரியனின் பொன் கிரணங்கள் நீரில் தவழ்ந்து விளையாடின. நல்ல மழை காரணமாக ஏரி தளும்பி வழிந்தது. அதற்கடுத்த வயல்களில் நல்ல விளைச்சல், குழந்தையைக் காக்கும் தாயைப் போல, கிராமவாசிகள் பயிர்களைக் கண்ணின் கருமணிபோலக் காத்து வந்தார்கள். அவர்கள் வாழ்வும், தாழ்வும் அதில் தானே இருக்கிறது. 'டைப்' அடித்துப் பிழைப்பவர்களாக இருந்தால் ஓர் இடத்தில் வேலை போனால் இன்னொன்று என்று தேட இட மிருக்கிறது. தொழிலாளிகள் அவர்கள் கற்ற தொழிலைத்தான் போஷித்து வளர்க்கவேண்டி இருக்கிறது. அவர்களை வாழவைக்கும் மண்ணை நம்பிக் குடியானவர் வாழ்கிறார்கள். அதில் கிடைக்கும் பலாபலன்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மணி மணியாய்க் கதிர்களில் நெல் மணிகள் அரும்பி இருந்தன. ஆயிற்று; கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. மார்கழியும் போனால் தைப் பொங்கலுக்கு முன்பே அறுவடை செய்துவிடுவார்கள். உழைப்பின் பலனை அனுபவித்து உள்ளம் நிறைவு பெறுவார்கள். வீட்டில் பெட்டி, படுக்கையைக் கூடத்தில் வைத்துவிட்டு ரகுபதி ஏரிக்கரைக்கு வந்து, உட்கார்ந்திருந்தான். தொலைவில் சாலையில் இரட்டை மாட்டு வண்டி ஒன்று ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது. பன்னிரண்டரை மணி பஸ் வந்து போய்விட்டது என்பதற்கு இந்தச் சவாரி வண்டிகள் தான் அத்தாட்சி. ஏனெனில், வெளியூரிலிருந்து வருபவர்கள் ரெயில் நிலையத்திலிருந்து கிராமத்துக்கு வருவதானால் மத்தியான்னம் இந்தப் பஸ்ஸிலாவது அல்லது மாலை ஐந்தரை மணி பஸ்ஸிலாவது தான் வரமுடியும். அப்படிப் பிரயாணிகளைக் கருணையுடன் சுமந்து வரும் பஸ் அவர்களை ஏரிக்கரையிலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே சாலையில் இறக்கிவிட்டுப் போய்விடும். கால்களில் தெம்புள்ளவர்கள் நடந்து கிராமத்தை அடைந்து விடுவார்கள். இல்லாவிடில் மாட்டு வண்டியில் வந்து சேர்வார்கள். சிறிது நேரம் வண்டியைக் கவனித்த ரகுபதி அசிரத்தையுடன் அங்கன வேறு பக்கம் ஓட்டினான். 'யாரோ வருகிறார்கள்' என்று அலட்சியமாக இருந்தான். அவன் அலட்சியத்தை முந்திக் கொண்டு தச்சரியம் கிளம்பியது.

'என்ன? ஸரஸ்வதியா வருகிறாள்? இவளுக்கு என்ன ஜோஸ்யம் ஏதாவது தெரியுமா? சமயசஞ்சீவியாக இருக்கிறாளே' என்று எண்ணி வியந்தான். அவன் நேருக்கு நேர் பார்க்கவும் அஞ்சினான். ஏதோ ஒருவித வெட்கம் அவனைச் சூழ்ந்துகொண் டது. குனிந்த தலையுடன் உட்கார்ந்திருந்த ரகுபதியின் முன்பு ஸரஸ்வதி வந்து நின்றாள்.

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.