"அத்தான்! இந்த ஊரில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று நிதானமாக அவனைக் கேட்டாள் ஸரஸ்வதி.
ரகுபதி சங்கோஜத்துடன் தலையை நிமிர்ந்து பார்த்தான். குற்றவாளியைப்போல் மென்று விழுங்கினான். வார்த்தைகள் தடுமாற, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு?" என்று அழைத்தான்.
"ஆமாம், அத்தான்! மைசூரிலிருந்து நேற்றுப் புறப்பட்டேன். உன் கடிதம் வந்தது! இனி தாமதிப்பதில் பிரயோஜனமில்லை என்று புறப்பட்டேன். ஒரு வாரத்துக்கு முன்பே வந்திருப்பேன். சில கச்சேரிகளுக்கு ஒப்புக்கொண்டதால் வர முடியாமல் போய்விட்டது. ஏரிக்கரையில் நீ உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இங்கேயே இறங்கிவிட்டேன்."
”இன்று மாலை நானும் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன், ஸரஸு. நீயும் வருகிறாய் அல்லவா?” என்று கேட்டான் ரகுபதி.
"ரொம்ப அழகாக இருக்கிறதே. வராமல் எனக்கு இங்கே என்ன வேலை?" என்று கேட்ட ஸரஸ்வதி சற்றுத் தணிவாக, "அத்தான்! தீபாவளிக்கு நீ ஊருக்குப் போக வில்லையாமே. அத்தைக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும், அத்தான்? பாவம்........"
"போகவில்லை ஸரஸு. பெண்களைத்தான் சஞ்சல புத்தியுள்ளவர்கள் என்று நம் பெரியவர்கள் வர்ணிக்கிறார்கள். ஆனால் உன்னிடம் நிரம்பியிருக்கும் மனோ உறுதி எனக்கு இல்லாமல் போய்விட்டது. பாதி வழியிலேயே நான் இங்கு வந்துவிட்டேன். நீயானால், மைசூர் பிரயாணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறாய்" என்றான்.
"இங்கே எதற்காக வந்தாய் யாருக்காக வந்தாய்? உன்னை நாடுபவளை நீ நாடிப் போகாமல் கானல் நீரை நம்பி வந்திருக்கிறாயா? தங்கத்தை என்ன என்று நினைத்துக் கொண்டு வந்தாய் அத்தான்? மலையிலிருந்து பள்ளத்தில் வழியும் அருவி பார்ப்பதற்கு ரம்மியமாகத்தான் இருக்கும். தொலைவில் நின்று அதன் அழகை நினைத்து வியக்கலாம். பார்த்து ரஸிக்கலாம். தவறிப் போய் அதில் காலை வைத்தோமானால் பரலோகம் போக வேண்டி யது தான். நீ மணமானவன். உன்னுடைய கடமையைப் புறக் கணித்துவிட்டுத் தங்கத்தைப் பார்க்க நீ வந்திருக்கக் கூடாது. அந்தப் பெண் பாவம் வெகுளி, அவளுக்கு என்ன தெரியும் அத்தான்?" என்று படபடவெனக் கூறினாள் ஸரஸ்வதி.
ரகுபதி செயலிழந்து நின்றுவிட்டான். 'ஸரஸ்வதி சங்கீதத்தில் தான் தேர்ந்தவள். தர்ம சாஸ்திரத்திலும் தேர்ந்தவளா?'
'படபடவென்று வார்த்தைகளைக் கொட்டி அத்தானைக் கோபித்துக்கொண்டோமே' என்று ஸரஸ்வதி வருந்தினாள். பிறகு சமாதானம் அடைந்து, "ரொம்பவும் இளைத்துப்போய் விட்டாய் அத்தான். அத்தை பார்த்தால் உருகிப்போய் விடுவாள். வா, வீட்டிற்குப் போகலாம். தங்கத்தைப்