பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. வா!" என்று அன்புடன் அவனை அழைத்தாள்.
ரகுபதி பேசுவதற்கோ, தர்க்கிப்பதற்கோ ஒன்றும் இல்லை; மறுமொழி கூறாமல் ஸரஸ்வதியுடன் அவன் வீட்டை நோக்கி நடந்தான். அவர்கள் வீட்டை அடையும் போது மாலை மூன்று மணிக்கு மேலாகிவிட்டது. கொல்லைப் பக்கம் மாட்டுத் தொழுவத்திலிருந்து தங்கம் ஸரஸ்வதி வருவதைக் கவனித்துவிட்டாள். சந்தோஷத்தால் அவள் மனம் துள்ளியது: துள்ளி ஓடும் கன்றைப்போல, "ஸரஸு அக்கா!" என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டு முற்றத்துக்கு வந்து ஸரஸ்வதியை இறுகச் சேர்த்து அணைத்துக்கொண்டாள் தங்கம்.
"என்னைப் பார்ப்பதற்குத்தானே அக்கா இவ்வளவு தூரம் வந்திருக்கிறாய்? என்னிடம் உள்ள வாஞ்சையினால் தானே அக்கா - இங்கே வந்தாய்?" என்றெல்லாம் சந்தோஷம் தாங்காமல் கேட்டாள்.
"ஆமாம், அதற்காகத்தான் வந்தேன். தங்கம் நீ எப்படி இருக்கிறாய் என்று பார்ப்பதற்குத்தான் வந்தேன்" என்று ஸரஸ்வதி கூறி அவளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள்.
ஸரஸ்வதியின் பேச்சுக் குரலைக் கேட்டு அலமு உள்ளிருந்து முற்றத்துக்கு வந்தாள். வந்தவள் திகைப்பும், பயமும் ஒருங்கே அடைந்தவளாக, "நீயா வந்திருக்கிறாய் ஸரஸு? உன் அத்தானைப் பார்த்தாயா? தீபாவளிக்கு ஊருக்குப் போகாமல் இங்கே வந்து உட்கார்ந்து விட்டான். என்ன சொன்னாலும் கேட்கவில்லையேடி. அம்மா; நான் என்ன பண்ணுவேன் சொல். மன்னிக்குத் தெரிந்தால் என்னைத்தான் குற்றம் சொல்லுவாள். நீ என்ன சொல்லுவாயோ என்று பயந்து செத்தேன் போ" என்று ஸரஸ்வதி எதையும் கேட்பதற்கு முன்பே படபடவென்று பேசினாள் அலமு.
'அலமு அத்தைக்குப் பயமா? அதுவும் என்னிடம் ஏற்பட்ட பயமா?' என்று ஸரஸ்வதி நினைத்துப் பார்த்துக்கொண்டாள்.
'அவள் எல்லோரும் பயப்படும்படியாகவா இருக்கிறாள்? தர்மத்தைக் கண்டு அதர்மம் அஞ்சுகிறது. சத்தியம் அசத்தியத்தை வெல்லுகிறது. பொறுமை கோபத்தை விரட்டுகிறது. நன்மை தீமையை அழிக்கிறது. அவ்வளவு தான்! ஸரஸ்வதியைக் கண்டு யாரும் பயப்பட வேண்டியதில்லை. நற்குணங்களைப் போற்றும் அந்தப் பெண் சாதாரணமானவள்.'
ஸரஸ்வதி புன்சிரிப்புடன் அலமுவைப் பார்த்துச் சிரித்து விட்டு உள்ளே போய்விட்டாள்.
------------
தொடரும்