Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 37 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 37. விமோசனம் உண்டா ?
சந்துரு தன் தாயிடம் கூறியபடி ரகுபதியைப் பார்த்து முடிவாக விஷயங்களை ஒழுங்குபடுத்துவது என்கிற தீர்மானத்துக்கு வந்து விட்டான். ஸரஸ்வதி இருந்தால் இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்வாள் என்றும் நம்பினான். பலவிதமான குழப்பங்களுக்கிடையில் ஸரஸ்வதியின் அழகிய முகமும், கருணை ததும்பும் கண்களும் அவன் மனத்தைப் பூரிக்கச் செய்தன. ஸரஸ்வதியை எதிர்பாராமல் கிராமத்தில் சந்தித்தால் அவன் ஆசை பூர்த்தி ஆகிவிடும். ஆகவே உற்சாகத்துடன் சந்துரு கிராமத்துக்குக் கிளம்பினான்.
இடையில் ஸரஸ்வதி கிராமத்தின் முக்கியமான இடங்களை எல்லாம் சுற்றிப் பார்த்தாள். தங்கமும், அவளும் ஆந்திரீகமாகக் கூடிப் பேசினர். ரகுபதி தன்னிடம் அசட்டுத்தனமாக நடந்து கொண்டதையெல்லாம் தங்கம் ஸரஸ்வதியிடம் விவரித்தாள், கோவிலில் புஷ்பக் குடலையைப் பற்றி அவன் இழுத்ததையும், தான் அவனைக் கடிந்து பேசினதையும் கூறிவிட்டுத் தங்கம், ’பாவம்' என்று வருந்தினாள்.
இதையெல்லாம் கேட்டபோது ஸரஸ்வதியின் மனம் வெட்கத்தால் குன்றிப்போனது. உயர்ந்த லட்சியவாதியாகிய ரகுபதி குறுகிய காலத்துக்குள் இவ்விதம் மாறிவிட்டான் என்பதை அவளால் நம்பவே முடியவில்லை. தங்கத்தின் மாசற்ற குணத்தையும், உறுதியையும் கண்டு வியந்தாள்.
”தங்கம்! உன்னை நான் ஊரில் ஒரு தடவை நீ புத்திசாலி என்று தெரிவித்தேனே. அந்த வார்த்தை பொய்க்கவில்லை. நீ ரொம்பவும் புத்திசாலி. மிகுந்த கெட்டிக்காரி. சாவித்திரியைப் பாராமல் உன்னை முதலில் நான் பார்த்திருந்தால் அத்தானுக்கு உன்னையே கல்யாணம் செய்து வைத்திருப்பேன், இவ்வளவு சங்கடங்கள் ஏற்பட்டிருக்காது” என்று பாராட்டினாள் ஸரஸ்வதி.
"போ, அக்கா! நீதான் என்னைக் கெட்டிக்காரி என்று கொண்டாடுகிறாய் புத்திசாலி என்று புகழ்ந்து பேசுகிறாய். நான், பெற்றவர்களுக்கும் உறவினர்காருக்கும் பாரமாக இருக்கிறேன். எனக்குக் கல்யாண ஆகவில்லையே என்று அம்மா வீட்டைவிட்டு வெளியிலேயே வருவதில்லை. பெரியம்மா வேறு மரம்மாதிரி நிற்பதாகச் சொல்கிறாள். கன்னிப்பெண், வாழாமல் வீட்டுடன் இருப்பதால் தான் தரித்திரம் பிடுங்குவதாக பெரியம்மா கோபித்துக்கொள்கிறாள். எனக்கு விமோசனம் ஏற்படுமா அக்கா? என்னை மணந்துகொள்ள யாராவது முன் வருவார்களா?" என்று கண்ணீர் வழியக்கேட்டு, ஸரஸ்வதியின் மடியில் முகத்தைப் புதைத்துக்கொண்டு தேம்பினாள் தங்கம்.
ஸரஸ்வதியின் மனம் துடித்துப் போய்விட்டது. 'எல்லா வசதிகளும் இருக்கும் என்னைக்