சந்துருவின் வரவை யாரும் எதிர்பார்க்க வில்லை. ஒரு நிமிஷம் ரகுபதியின் மனத்தில் கோபம், ரோஷம், வெட்கம், அவமானம் முதலிய உணர்ச்சிகள் தோன்றின. தலையைக் குனிந்து உதட்டைக் கடித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தான் அவன்.
வீட்டுக்கு வந்தவர்களை ”வாருங்கள்" என்று வாய்குளிர அழைப்பது நமது சிறந்த குணங்களில் ஒன்று. வரவேற்காத வீட்டு வாசலை மிதிப்பதற்குக்கூட உள்ளம் கூசுகிறது.
சந்துரு தயங்கினான். பாட்டைப் பாதியில் நிறுத்தி விட்டாள் ஸ்ரஸ்வதி. தன் அழகிய கண்களை உயர்த்தி, "நமஸ்காரம், வாருங்கள். ஊரில் எல்லோரும் சௌக்கியந்தானே?* என்று விசாரித்தாள்.
தங்கம் எழுந்து இரண்டெட்டில் உக்கிராண அறைக் கதவருகில் போய் நின்று, வந்தவர் யாராய் இருக்கும் என்று யோசித்தாள். சுருள் சுருளாக வாரிவிடப்பட்ட கேசமும், ஆழ்ந்து சிந்திக்கும் கண்களும் உயர்ந்த உருவமும் கொண்ட அந்தச் சுந்தர புருஷனை, ஆறு முகனேதாள் தனது பிரார்த்தனையைக் கேட்டு அனுப்பி இருக்கிறானோ என்று எண்ணிப் பூரித்துப் போனாள். திடீரென்று எதிர்பாராதவிதமாக --மாயமாக வந்து நிற்கும் புருஷன் – தன்னை வாழ்விக்கத்தான் வந்திருக்கிறானோ என்று எண்ணி எண்ணி மாய்ந்துபோனாள் தங்கம்.
சந்துரு ஸரஸ்வதியைக் கனிவுடன் பார்த்து. "எல்லோரும் சௌக்கியந்தான். அம்மாவுக்குத்தான் உடம்பு சரியில்லை . பலஹீனமாக இருக்கிறாள்" என்று கூறிவிட்டு, "மாப்பிள்ளை! தீபாவளிக்கே நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஸரஸ்வதியும் வருவாள் என்று அம்மா நினைத்துக் கொண்டிருந்தாள்" என்றான்.
"நான் வந்திருக்கவேண்டியது தான்! அத்தானும், நானும் ரெயிலடி வரையில் ஒன்றாகத் தான் வந்தோம். அவசரமாக என் தகப்பனாரைப் பார்ப்பதற்கு மைசூர் போயிருந்தேன். வராமல் விட்ட பிசகை இப்பொழுது தான் உணர்கிறேன்!" என்றாள் ஸரஸ்வதி.
"யார் பேரில் பிசகிருந்தாலும் அதையெல்லாம் மறந்து மன்னித்துவிடுவதுதான் மனிதப் பண்பு. சாவித்திரி ரொம்பவும் மாறிவாட்டாள். அவள் மனசிலே தன் கணவனை எப்பொழுது சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவல் மிகுந்திருக்கிறது. தன் செய்கையை நினைத்து வெட்கப்படுகிறாள் என்றே தோன்றுகிறது. ரகுபதி! பெண்ணின் மனத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பு சீதா என்னிடம் ஒரு சிறு நோட்டுப் புஸ்தகத்தைக் கொடுத்தாள். படித்தேன். நீந்தத் தெரியாதவன் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பதை யாராவது பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவனைக் காப்பாற்ற எப்படியும் முயலுவார்கள். சாவித்திரி கண்ணீர் விட்டுப் பல இரவுகள் அழுதிருக்கிறாள் என்பதை அந்தச் சிறு புஸ்தகம் விளங்க வைத்துவிட்டது.
"மாடியிலே நிலவு வீசுகிறது. களைத்து வீடு வந்த கணவருக்கு நான் எந்த வகையில்