இன்பமளித்தேன்? கோபத்தால் பொருமினேன், ஏன்?”
"கணவர் தூங்கிவிட்டார். அமைதியாகத் தூங்குகிறார். அவர் அமைதி என் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. பொறாமைத் தீயில் மனம் வெந்து போகிறது.”
"இன்னும் என்னென்னவோ எழுதி இருக்கிறாள். தன் தவறை உணர்ந்துவிட்டாள் என்றே நினைக்கிறேன். அசட்டுப்பெண்! உங்களுக்குக் கடிதம் எழுதி இருக்கலாம். மனசைக் கொட்டிக் கதறி இருக்கலாம். ஓடிவந்து உங்கள் காலில் விழுந்திருக்கலாம். என் தங்கை குழந்தைப் பருவத்திலிருந்தே பிடிவாதத்தில் வளர்ந்தவள். அந்தப் பிடிவாதமும், போலிக் கௌரவ முந்தான் அவளைத் தடுத்திருக்கவேண்டும்!" என்று சந்துரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டே போனான்.
ஸரஸ்வதி ரகுபதியைத் திரும்பிப் பார்த்துக் கண்டிப்பு நிறைந்த குரலில், "அத்தான்! அவருடன் ஊருக்குப் புறப்படு, உன் மனைவியை அழைத்துவா, அத்தான். இது பரீக்ஷைக்கூடம் அல்ல; கேள்விகள் தயாரித்துக் கேட்பதற்கும், அவர் பதில்கள் அளிப்பதற்கும். சாவித்திரி தன் குற்றங்களை உணர்ந்து விட்டாள் என்பதே போதுமானது. உன் லட்சியத்தைக் குறுகிய பாதையில் நடத்த வேண்டும் என்பதில்லை. சாவித்திரி ஒருத்தி சங்கீதம் பயின்றுவிட்டால் உன் லட்சியம் நிறைவேறிவிடுமா? ஆர்வத்துடன் சங்கீதத்தைப் பயில்வதற்கு எவ்வளவோ பெண்கள் காத்திருக்கிறார்கள். பரந்த மனப்பான்மையுடன் அவர்களுக்கு உதவி செய்தால் லட்சியம் நிறைவேறிவிடும். இதற்காக இனிக்க வேண்டிய இல்வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்ளாதே" என்றாள் ஸரஸ்வதி.
சந்துரு அப்படியே அயர்ந்துவிட்டான். ' நாவிலே கலைவாணி நர்த்தனம் புரியும்போது ஸரஸ்வதி ஏன் இவ்வளவு அழகாகப் பேசமாட்டாள்! இந்தப் பெண்ணைப் பார்த்து எப்படி என்னை மணந்து கொள்கிறாயா என்று கேட்பது?' என்று புரியாமல் விழித்தான் சந்துரு.
------------
தொடரும்