(Reading time: 8 - 16 minutes)
Irulum oliyum
Irulum oliyum

ஸரஸ்வதியும், ஸ்வர்ணமும் ஊருக்குப் போகப் போகிறார்கள் என்பதை நினைத்து வேலைக்காரப் பெண் கண் கலங்கினாள். புது எஜமானி எப்படி இருப்பாளோ என்கிற பயம் காரணமாக இருக்கலாம்.

கார்த்திகைச் சீருடன் சாவித்திரியும், ரகுபதியும், சந்துருவும், மங்களமும் வந்து சேர்ந்தார்கள். ஸரஸ்வதி முன்னைப் போல் ஆரத்தியுடன் ஓடிச் சாவித்திரியை வரவேற்கவில்லை! மனத்தில் தாக்கிய காயம் ஆழமாகப் போய்விட்டது. அதன் வலியை எவ்வளவு தான் அவள் மறக்க முயன்றாலும் அது வலித்துக்கொண்டேதான் இருந்தது. கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட பிளவுக்கே தான் காரணமானவள் என்று நினைத்து ஸரஸ்வதி ஒதுங்கிவிட்டாள். அவளுடன் வந்திருந்த தங்கம் சிரித்த முகத்துடன் ஆரத்தியைக் கொண்டுவந்தாள்.

"ஏதோ, கிழக்குப் பக்கமாக நில்லுங்கள்" என்றாள். "கௌரீ கல்யாணமே வைபோகமே" என்று பாடினாள். எல்லோரும் சிரித்தார்கள். எல்லோர் முகத்திலும் புன்னகை தவழ, மனத்தில் திருப்தியான இன்ப அலைமோத இந்தப் 'புனர் கிருகப் பிரவேசம்' நடைபெற்றது.

அன்பு கனிந்த பார்வையுடன் ஸரஸ்வதியைத் தேடிய மங்களம் அவளுடன், பேசச் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொண் டாள். "ஸரஸ்வதி! எங்கள் ஊருக்கு வரக்கூடாதென்று விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறாயா? தீபாவளிக்கு வருவாய் என்று நினைத்திருந்தேன். உன் அத்தானுடன் வருவாய் என்று நினைத்து ஏமாந்தேன். இப்பொழுது நானாகவே உன்னைப் பார்ப்பதற் கென்று வந்துவிட்டேன். ஏனம்மா வரவில்லை?" என்று விசாரித்தாள்.

"வராமல் என்ன மாமி? எனக்கு எல்லோரும் ஒன்றுதான். தாயன்புக்காக ஏங்கியவள் நான். உடன் பிறந்த சகோதரிகள் யாரும் இல்லையே என்று பார்க்கும் பெண்களை எல்லாம் என் சகோதரிகளாகவே நினைக்கிறேன். கணவன் - மனைவிக்குள் ஆயிரம் இருந்தாலும், சாவித்திரி என்னை அழைத்திருக்க வேண்டாமா? அவளுக்கு நான் என்ன தீங்கு செய்தேன்?-"

ஸரஸ்வதி கண்ணீர் விட்டு அழுது யாரும் அதிகமாகப் பார்த்ததில்லை. கஷ்டத்திலேயே வளர்ந்து, தாயை இழந்து அவதிப்பட்டவள் அவள். பிறருடைய துன்பங்களை உணர்ந்தவள். அவள் மனம் புண்ணாகித்தான் அழுதிருக்க வேண்டும்.

சந்துருவின் மனம் வாடிப்போய்விட்டது. ரகுபதி முகம் சோர, வேறுபக்கம் திரும்பிக் கொண்டு விட்டான். ஸ்வர்ணம் அங்கு நிற்கவேயில்லை. சாவித்திரி தலை குனிந்து உள்ளேபோய் விட்டாள். மனச்சாட்சி என்பது ஒன்று உண்டென்றால் அவள் தவறுகளுக்கு அதுவே பதில் கூறும்.

அமைதியாக இருந்த கூடத்துக்குத் தங்கம் உள்ளிருந்து ஓடி வந்தாள். "பாகிலே பொரியைப் போடுவதா? பொரியிலே பாகை ஊற்றுவதா, அக்கா? எது சரி சொல் பார்க்கலாம்?" என்றாள்

2 comments

  • தொடர் முடியப்போகும் அறிகுறிகள் தெரிகிறது. சிறப்பாக எழுது கிறீர்கள், பாராட்டு!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.