சிரித்துக்கொண்டு.
ஸரஸ்வதியின் முகம் மலர்ந்துவிட்டது.
"நீதான் சொல்லேன். எனக்கு இதெல்லாம் தெரிந்து என்ன ஆகவேண்டும் சொல். நான் என்ன வீட்டுக்குள் பொரி உருண்டையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறேனா? உனக்குத்தான் கல்யாணம் நடக்கப்போகிறது. எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்" என்றாள் அவள்.
இதைக் கேட்ட சந்துருவின் முகம் வாடிப்போய்விட்டது. 'ஸரஸ்வதி என்ன சொல்கிறாள்? தனக்குக் கல்யாணமே வேண்டாம் என்கிறாளா? இது என்ன ஏமாற்றம்?'
சாப்பிடும் கூடத்தில் மங்களமும், ஸ்வர்ணமும் பேசிக் கொண்டிருந்தார்கள். "அவள் சம்மதப்படுவாள் என்று எனக்குத் தோன்றவில்லை அம்மா. அவள் போக்கே விசித்திரமாக இருக்கிறது. வட நாட்டுக்கு யாத்திரைக்கல்லவா கிளம்பி இருக்கிறாள்? கல்லை அசைத்தாலும் அசைக்கலாம். அவள் உறுதியை அசைக்க முடியாது" என்றாள் ஸ்வர்ணம்.
சந்துரு மனசைத் திடப்படுத்திக்கொண்டான். 'ஆகட்டும். ஸரஸ்வதியையே கேட்டுவிடுகிறேன்' என்று சொல்லிக்கொண்டான். ஆனால் ஸரஸ்வதியைத் தனியாகவே அவனால் சந்திக்க முடியவில்லை. எப்போதும் அவள் பின்னால் தங்கம் 'அக்கா, அக்கா' என்று அழைத்துக்கொண்டிருந்தாள். ' அந்தப் பெண் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். கேட்டுவிடுவது' என்று தீர்மானித்துக்கொண்டு அவர்களிருவரும் இருந்த இடத்தை நாடிச் சென்றான்.
ஸரஸ்வதி புஷ்ப மாலை கட்டிக்கொண்டிருந்தாள். சந்துரு வந்து நிற்பதை ஏறிட்டுப் பார்த்த தங்கம் வெட்கத்தால் குன்றிப் போனாள். "அக்கா! அவர் வந்திருக்கிறார்" என்றாள். சந்துரு சிரித்துக்கொண்டே, 'ஒரு முக்கியமான விஷயம். நானும் அம்மாவும், சாவித்திரியைக் கொண்டுவந்து விடுவதற்காக இவ்வளவு தூரம் வரவில்லை-"
"நீங்கள் வந்திருக்கும் சமாசாரம் எனக்குத் தெரியுமே! என்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படியாகச் செய்வதற்கு வந்திருக்கிறீர்கள்; அவ்வளவு தானே-" என்று கூறிவிட்டு ஸரஸ்வதி யோசித்தாள். பிறகு தைரியத்துடன் நிமிர்ந்து சந்துருவைப் பார்த்து, "நண்பரே! சிறந்த குணசாலியான பெண்ணை மணக்க ஆசைப்படுகிறீர்கள். கலை ஆர்வத்தில் மூழ்கியிருக்கும் நான், உங்களுடைய அருமை மனைவியாக இருக்க முடி யாது. என்னுடைய வழியே அலாதியானது. லட்சியப் பாதையில் செல்பவர்கள் லட்சியவாதிகளைத் தாம் மணந்து கொள்ள ஆசைப்படுவார்கள். அப்படி இராமல் போனால் ரகுபதியும். சாவித்திரியும் போலத்தான் இருக்க வேண்டும். வீட்டின் ஒளியாக, கிருஹலக்ஷ்மியாக, சகதர்மிணியாக இருக்க வேண்டிய பெண், கலை ஆர்வம் கொண்டவளாகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்முடைய