ஹிந்து சமுதாயம் வகுத்திருக்கிற அரிய விஷயங்களைத் தெரிந்தவளாக இருந்தால் போதும். கணவனிடம் அன்பு காட்டத் தெரிந்தால் போதும். பெற்ற குழந்தைகளை வளர்க்கத் தெரிந்தால் போதும். வீட்டை ஒளி யுடன் வைத்துக்கொள்ளத் தெரிந்தால் போதும். சங்கீதம் தெரிந்த வித்வாம்சினியாகவோ, எழுதத் தெரிந்த எழுத்தாளி யாகவோ, ஆடத் தெரிந்த அதிசயப் பெண்ணாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. குணத்தில் சிறந்த பெண் திலகங்கள் நிறைந்த தமிழ் நாடு இது. இதிலே எந்தக் கன்னிகையாவது உங்களைக் கட்டாயம் மணக்க வருவாள். இதோ! இந்தப் பெண் ஏழை என்கிற காரணத்தால் வாழ்வு கிடைக்குமா என்று ஏங்குகிறாள். நீங்கள் மனம் வைத்தால் அவளை வாழவைக்கலாம். தங்கம் எல்லாவிதத்திலும் சிறந்தவள். என்னைவிடச் சிறந்தவள். எனக்காவது பாடத் தெரியும் என்கிற எண்ணம் உண்டு. அவள் மனசிலே ஒரு விதமான அகம் பாவமும் இல்லை."
ஸரஸ்வதி கொஞ்சநேரம் பிரசங்கம் புரிந்தாள். தங்கம் ஆத்திரத்துடன் ஸரஸ்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, "அக்கா! அக்கா! என்ன இப்படிப் பேசுகிறாயே?" என்று அதிசயப்பட்டாள்.
சந்துருவின் மனத்தில் புதைந்து கிடந்த பிரச்னைக்கு விடை கிடைத்துவிட்டது. ஸரஸ்வதி லட்சியப் பெண். உன்னதப் பாதையில் நடக்கிறவள். சாமானிய வாழ்விலே அவள் சிக்கி உழலமாட்டாள் என்பதும் தெரிந்து போயிற்று.
அவன் ஒரே வார்த்தையில் பதில் கூறினான். "ஆகட்டும் ஸரஸ்வதி! உன் விருப்பப்படியே தங்கத்தின் பெரியம்மாவைக் கண்டு பேசுகிறேன்" என்றான்.
அவன் அங்கிருந்து சென்ற பிறகு தங்கம் ஸ்ரஸ்வதியின் முகத்தோடு தன் முகத்தைச் சேர்த்துக்கொண்டாள்.
"அக்கா!" என்று தேம்பினாள்.
"என்னை விட்டுவிடு அசடே. உனக்குத்தான் அர்ச்சுனன் கிடைத்துவிட்டானே. நான் எதற்கு?" என்று ஸரஸ்வதி
தங்கத்தின் கண்ணாடிக் கன்னங்களில் லேசாகத் தட்டினாள்.
------------
தொடரும்