Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 40 - ஸரோஜா ராமமூர்த்தி
இருளும் ஒளியும் : 40. இருளும் ஒளியும்
அந்த ஊரிலிருக்கும் கோதண்டராமனின் ஆலயம் அன்று ஜகஜ்ஜோதியாக விளங்கியது. பிராகாரத்தைச் சுற்றிவந்த ஸரஸ்வதி அழகிய மனம் உருகும் காட்சி ஒன்றைக் கவனித்தாள். வயது முதிர்ந்த கிழவி ஒருத்தி, கோவில் பிராகாரங்களுக்கு விளக்கேற்றிக் கொண்டே வந்தாள். 'இவள் எதற்காகக் கோவிலுக்கு விளக்கேற்ற வேண்டும்? ஆசைக்காதலன் கிடைக்க வேண்டும் என்று தவம் புரிகிறாளா? வீட்டை விளங்கவைக்க மகப்பேறு வேண்டும் என்று வேண்டுகிறாளா? செல்வம் கொழிக்க வேண்டும் என்று விளக்கேற்றிக் கும்பிடுகிறாளா?'-ஸரஸ்வதியின் ஆச்சரியம் எல்லை கடந்துவிட்டது. மெதுவாக அவளருகில் சென்று ஸரஸ்வதி, "பாட்டி" என்று அழைத்தாள். "உங்களுக்கு என்ன கோரிக்கை நிறைவேறுவதற்காக இப்படி விளக்கேற்றி வணங்குகிறீர்கள்?" என்று கேட்டாள்.
கிழவியின் கண்களில் கண்ணீர் பெருகியது. "அம்மா! சில வருஷங்களுக்கு முன்புகூடக் கண்கள் சரியாகத் தெரியாமல் இருந்தன. பெரிய பெரிய சிகிச்சைகள் செய்து கொள்ளப் பணம் இல்லை. கோதண்டராமனை நம்பினேன். பார்வை கிடைத்தது. என் கண்களுக்கு ஒளி தந்தவனுக்கு நான் விளக்கேற்றுகிறேன் அம்மா. ஒளிமயமாக இருப்பவனை ஒளியின் மூலமாக வணங்குகிறேன்."
பொருள் நிறைந்த அவள் வார்த்தைகளைக் கேட்டு ஸரஸ்வதியின் உள்ளம் சிலிர்த்தது. எல்லோருடைய வாழ்விலும் ஒளி அவசியம். இரவாகிய இருளைக் கண்டால் சகல ஜீவன்களும் அஞ்சுகின்றன. நித்திரை மயக்கத்தில் ஆழ்ந்து, இருளை விரட்டி ஒளியைக் காண விழைகின்றன. அருணோதயத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். ' நல்லபடியாகப் பொழுது விடியட்டும்' என்பதில் வாழ்விலே ஒளி வீசட்டும் என்கிற அர்த்தம் மறைந்து காணப் படுகிறது.
'ரகுபதி – சாவித்திரியின் வாழ்வில் ஒளி வீசட்டும். தங்கமும் சந்துருவும் ஒளியுடன் வாழட்டும். என் கலை வாழ்விலே ஒளி வீச ஆண்டவன் அருள் புரியட்டும்' என்று பிரார்த்தித்துக் கொன்டே ஸரஸ்வதி வீட்டை அடைந்தாள்.
சாவித்திரியும், தங்கமும் அகல் விளக்குகளை ஏற்றிக்கொண்டிருந்தார்கள். வீடு முழுவதும் ஒரே ஒளிமயம். கூடத்திலே முருகனின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
'முத்தமிழால் வைதாரையும் வாழவைக்கும்" வள்ளி நாயகன் கம்பீரமாகக் காட்சியளித்தான்.
உள்ளே வந்த ஸரஸ்வதி தன் வீணையை எடுத்து வைத்துக் கொண்டாள். பிறகு செஞ்சுருட்டியில் திருப்புகழைப் பாட ஆரம்பித்தாள்:
"தீட மங்கள ஜோதீ நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம