"தங்களைப் போன்றவர்களின் ஆதரவும் ஆசியும் தான் முக்கியம். இப்போது கூடக் கல்லூரி விஷயமாகத்தான் தங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். தங்கள் நேரத்தை வீணாக்க மனமில்லை. சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஹாஸ்டல் ஒன்று கட்டுவதற்கு நிதி திரட்டிக் கொண்டிருக் கிறோம். அதற்குத் தங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறோம்,'' என்று மனப்பாடம் செய்து வைத்திருந்த வார்த்தைகளை அப்படியே கூறி முடித்தாள் பார்வதி.
''எனக்கு அதைப்பற்றியெல்லாம் இப்போது சிந்திக்க அவகாசம் இல்லை. நேரம் கிடைக்கும்போது நானே தங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன்'' சேதுபதி நாலே வார்த்தைகளில் நடக்கென்று பேட்டியை முடித்து விட்டார். பார்வதிக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்தது. நன்கொடை இல்லையே என்பதல்ல; பேட்டி இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே என்றுதான்.
அவரிடம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. ஆயினும் வணக்கம் என்று கூறி விடைபெற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
அந்தத் தங்க எழுத்துக்களை உற்றுப் பார்த்தபடியே யோசிக்கலானாள் பார்வதி. அன்று அவரைச் சந்தித்துப் பேசிவிட்டு விடைபெற்றுக் கொள்ளும்போது அவரைப் பிரிந்து செல்லவே அவளுக்கு மனமில்லை. இதுவரை அவள் யார் யாரையோ, எத்தனை எத்தனையோ அறிவாளிகளை, பிரமுகர்களை, தனவந்தர்களைச் சந்தித்து உரையாடியிருக்கிறாள். அப்போதெல்லாம், ஏற்படாத வருத்தம் இவரைப் பிரியும்போது மட்டும் ஏன் ஏற்படவேண்டும்? இந்தக் கேள்விக்கு அன்று அவளுக்கு விடை கிடைக்கவில்லை. ஏன் இன்றும் இன்னமும் கிடைக்கவில்லை.
----------------
தொடரும்