வளைந்து அடர்த்தியாக மண்டியது. அம்மம்மா! என்ன மணம்! அந்தத் தெய்விக மணத்தை நுகரும்போது உள்ளத்தில் எத்தனை நிம்மதி பிறக்கிறது! முன்வாசல் ஹாலில் மாட்டப்பட்டிருந்த கெடிகாரத்தின் பெண்டுலம் அமைதியாக வாசலாடிக் கொண்டிருந்தது.
பகவான் ராமகிருஷ்ண பரமஹம்ஸரும், அன்னை சாரதா மணி தேவியாரும் ஹால் சுவரின் இன்னொரு புறத்தை அலங்கரித்தார்கள்.
’ஒரு வீட்டில் மாட்டப்பட்டுள்ள படங்களே அந்த வீட்டில் வசிப்பவர்களின் உள்ளத்தைப் பிரதிபலித்துக் காட்டும் சின்னங்கள்' என்று யாரோ எப்போதோ கூறிய தாக ஞாபகம்.
”ராஜா!...''
வீணையின் ரீங்காரம் போல் மூன்றாம் முறையாக ஒலித்தது அக்குரல்.
"ராஜா இல்லை அம்மா!... விடியற்காலை ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு போனவர்தான். இன்னும் வரவில்லை. என்.ஸி.ஸி. போலிருக்கிறது...'' சமையல்காரி ஞானம் குரல் கொடுத்தாள்.
வாசல், 'போர்ட்டிகோ'வுக்கு முன்னால் துடிப்பாக வளர்ந்து கொண்டிருந்த விசிறி வாழையின் இரண்டொரு இலைகள் அசைவதைத் தவிர, அந்தப் பங்களாவுக்குள் வேறு சலனமே இல்லை. காம்பவுண்ட் கேட்டருகில் தேய்ந்து போன முக்காலியில் உட்கார்ந்திருந்தான் கூன் முதுகுப் பெருமாள். அவனுக்கு அந்தப் பங்களாவுக்குள்ளே, வெளியே நடக்கிற விவகாரம் எதுவுமே தெரியாது. காரணம், காது கொஞ்சம் மந்தம். முன்னெல்லாம், அதாவது அவனுடைய அறுபதாவது வயதில் இப்படியில்லை. இப்போது ஒரே டமாரச் செவிடு! பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைப் புத்தகம் ஒன்றும், அல்லி அரசாணி மாலையும், வயது முதிர்ந்து காலத்தின் சுழலிலே தாக்குண்டு, பழுப்பேறி,ஏடு நைந்து தொட்டால் துகளாக உதிர்ந்துவிடும் நிலையில் அவன் அறிவுத் தோழர்களாக அவனுடனேயே இருந்து கொண்டிருந்தன. பெருமாள் உட்கார்ந்தபடியே உறங்கிக் கொண்டிருந்தான். அது சர்விஸில் ஏற்பட்ட பழக்கம்! நரம்புகள் தளர்ச்சியுற்று உடல் முழுவதும் சுருக்கங்கள் கண்டு, முதுகில் கூன் விழுந்த பிறகும் அவனை வெளியே அனுப்பிவிடப் பார்வதியின் இளகிய மனம் இடம் தரவில்லை.
கல்லூரியின் சேவகனாக ஐம்பது ஆண்டுக்காலம் தொண்டாற்றிய அந்தத் தொண்டுக் கிழவனை அநாதரவாக விட்டு விட மனமின்றித் தன்னுடைய பங்களாக் காவலனாக அமர்த்திக் கொண்டாள்.
சாப்பாட்டு ஹாலில் ராஜாவுக்கும் பார்வதிக்கும் மணை போட்டுத் தயாராக வைத்திருந்தாள் ஞானம். மணி ஒன்பதரை ஆயிற்று. தினமும் இதற்குள் சாப்பிட்டு முடிந்திருக்கும். இன்று கொஞ்சம் லேட். ராஜா வந்தால் சாப்பிட உட்கார வேண்டியது தான். அது ஏனோ, பார்வதிக்கு