அவளுடைய எளிமையான அடக்கமான தோற்றத்தில் அமுங்கிப் போயிருந்தன. நாகரிகம் என்ற பெயரில் கல்லூரி மாணவிகள் தங்களை அலங்காரம் செய்து கொண்டு வரும் அவலட்சணங்களைக் காணும்போதெல்லாம், அந்த அநாகரிகமான பண்பற்ற கோலங்களைக் கண்டிக்கத் தவறியதில்லை அவள்.
"ஏண்டா கறியைச் சுடச் சுட விழுங்கி விட்டாயா? அவசரக் குடுக்கை! ஆத்திரப்பட்டால் இப்படித்தான் ஆகும்...'' பார்வதி தன் செல்ல மருமகன் ராஜாவை நாசூக்காகக் கண்டித்தபடியே மணைமீது அமர்ந்தாள்.
''அதற்காக ஆறிப் போகும்படியும் விடக்கூடாது அத்தை! அப்போது ருசியை இழந்து விடுவோம்'' என்றான் ராஜா.
பார்வதிக்குச் சுருக்கென்றது.
’அளவுக்கு மீறிக் காலம் கடத்துவதும் கூடாது தான்.... ராஜா எதை மனத்தில் எண்ணிக்கொண்டு இப்படிச் சொல் கிறான்? இவனுக்குத் திருமணம் செய்யும் காலத்தைக் கடத்தி விடக் கூடாது என்று எச்சரிக்கிறானா? அல்லது...'
காலையில் மேஜை மீது ஆறிக்கிடந்த காப்பியை அருந்தும் போது கூட அவளுக்கு இந்த எண்ணம் உண்டாயிற்று. சிந்தனையில் லயித்துக் காப்பியின் ருசியை இழந்து விட்டது கால தாமதத்தினால் நேர்ந்த இழப்புத்தானே?
'ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றின் சுகத்தைப் பெற முடியும். எதை அடைய விரும்புகிறோமோ, எந்த மாபெரும் காரியத்தைச் சாதிக்க விரும்புகிறோமோ, அந்தக் காரியமே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகி விடும்போது மற்ற இன்பங்களெல்லாம் அற்பமாகி விடுகின்றன. உலகத் தில் அரும் பெரும் காரியங்களைச் சாதித்தவர்கள், சாதிப்ப வர்களின் வாழ்க்கையைத் துருவினால், அவர்களின் சரித்திரத்தை ஆராய்ந்தால் இந்த உண்மை நமக்குப் புலனாகாமற் போகாது. சிற்சில சமயங்களில் என்னை நான் மறந்து விடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதனால் என் வாழ்க்கையில் நான் பெறவேண்டிய இன்பத்தைப் பெறத் தவறி விட்டேனா? காலம் கடந்து போய் விட்டதா?
பார்வதியின் சிந்தனையைக் கலைத்தான் ராஜா.
”அத்தை! இந்தச் செவிட்டுப் பெருமாளை எதற்காகத் தான் கேட்டில் உட்கார வைத்திருக்கிறாயோ? காதுதான் கேட்கவில்லை யென்றால் கண்களையும் மூடிக்கொண்டு நிம்மதியாகத் தூங்கி விடுகிறானே !”
''பாவம்! அநாதைக் கிழவன். இந்த உலகத்தில் அவனுக்கு யாருமே இல்லை. அத்தோடு காது வேறு செவிடு. தன் வாழ்நாள் முழுவதும் நமது கல்லூரியிலேயே கழித்த வனைக் காப்பாற்றுவது நம் பொறுப்பு இல்லையா?...”