பிரமாதம்! கூடை முறம் அப்புறம் கட்டிக் கொள்ளலாம். இப்போது இந்தத் தோரணங்களை முதலில் கட்டி முடிக்கலாமா?'' ராஜா ரொம்பப் பழகியவன் போல் பேசினான்.
"இதோ நாங்கள் தோரணம் தொடுத்து ரெடியாக வைத்திருக்கிறோம்'' என்றாள் பாரதி.
"இவற்றை எப்படிக் கட்டுவதாம்? இங்கே யாருக்காவது ஏதாவது 'ஐடியா’ இருக்கா?'' என்று கேட்டான் ராஜா.
''என்ஜினீயர் படிக்கிறவர்களுக்கு இல்லாத ஐடியாவா?'' பாரதி வேடிக்கையாகக் கூறினாள்.
''என்ஜினீயர் என்றால் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமா என்ன? ஒரு துறையில் புத்திசாலிகளாயிருந்தால் அவர்களுக்கு உலகத்திலுள்ள அத்தனை விஷயங்களும் தெரிந் திருக்க வேண்டுமென்பதில்லை. அப்படியானால் சர்ச்சிலுக்கு வேஷ்டி கட்டத் தெரியாது. குருஷ்காவுக்கு ஹாரிகாம்போதி பாடத் தெரியாது'' என்றான் ராஜா.
இந்த ஹாஸ்யத்துக்கு பலமாகச் சிரித்தார்கள் பாரதியின் சிநேகிதிகள்! அந்தப் பெண்கள் சிரித்ததும் ராஜாவுக்குத் தலை கிறுகிறுத்தது.
சுவர் ஓரமாக ஒரு பெஞ்சை இழுத்துப் போட்டு, அதன் மீது ஒரு ஸ்டூலை எடுத்து வைத்து அதன் மீது ஏறி நின்று கொண்ட அவன், ''ஆணி எங்கே, சுத்தியல் எங்கே?'' என்று அதிகாரம் செய்தான்.
ஆணிகளையும் சுத்தியலையும் கொண்டு வந்தாள் பாரதி.
ராஜா அவளிடமிருந்து ஆணி ஒன்றை வாங்கிச் சுவரிலே வைத்துச் சுத்தியால் ஓங்கி ஓர் அடி அடித்தான். ஆணி வளைத்துக் கொண்டது !
வளைந்த ஆணியை எரிச்சலோடு கீழே எறிந்துவிட்டு, ”பரவாயில்லையே! கட்டடம் ரொம்ப ஸ்ட்ராங்காகத்தான் இருக்கிறது. உங்க அப்பா கட்டிக் கொடுத்த கட்டடம்
அல்லவா?”
”இது எங்கப்பா கட்டியதில்லை........ கொத்தனார்........”' என்றாள் பாரதி.
ஏதோ அபூர்வ ஹாஸ்யத்தைக் கேட்டு விட்டது போல் அந்தக் கட்டடமே இடிந்து விழுகிற மாதிரி சிரித்தார்கள் அந்தப் பெண்கள்.
”சரி, இன்னொரு ஆணியைக் கொடுங்கள்'' என்று பாரதியைப் பார்த்துக் கேட்டான் ராஜா.
பாரதி கொஞ்சம் வலுவான ஆணியாகவே எடுத்துக் கொடுத்தாள்.
அதைக் கையில் வாங்கியபடியே, ”முதல் முதல் ஆணியைக் கண்டு பிடித்தவர் யார்?” என்று ஒரு குவிஸ் கேள்வி போட்டான் ராஜா.
''முதல் முதல் சுத்தியலைக் கண்டு பிடித்த மேதாவி யார்?” என்று பதிலுக்கு இன்னொரு குவிஸ் கேள்வி போட்டாள் பாரதி.