”ஆணியெல்லாம் ரொம்ப 'வீக்' அத்தை! கார்ப்பென்ட்டரை எதிரில் பார்த்தேன். தோரணம் கட்டும் வேலையை அவனிடமே ஒப்படைத்து விட்டேன். மூன்று மணிக்கு எனக்கு ஒரு முக்கிய வேலை இருக்கிறது. நான் போய் விட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுகிறேன்" என்றான்.
"அந்த முக்கிய வேலை என்னவென்று எனக்குத் தெரியும். மாடினி சினிமாதானே?'' என்று கேட்டாள் அத்தை.
# # #
திருவிழாக் கோலம் பூண்டு துலங்கிய அந்தக் கல்லூரி யெங்கிலும் மிதந்து கொண்டிருந்த நாதஸ்வர இசை காற்றிலே கரைந்து கொண்டிருந்தது.
புதிய ஹாஸ்டல் மண்டபத்துக்கு எதிரே வரிசையாகப் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் நகரத்தின் முக்கிய பிரமுகர்களும் சீமாட்டிகளும் கல்லூரியைச் சேர்ந்த புரொபஸர்களும், லெக்சரர்களும் அமர்ந்திருந்தனர். இடை வெளியில், கல்லூரி மாணவிகள் அணி அணியாகவும் அலங்காரமாகவும் உட்கார்ந்திருந்தனர்.
கனம் நீதிபதியும், திருவாளர் சேதுபதியும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தார்கள். மேடையின் பின்னணியில் பரமஹம்சரும் தேவியாரும் காட்சி அளித்துக் கொண்டிருந்தனர். அடர்ந்த ஊதுவத்தியின் நறுமணம் ஹாலைப் புனிதமாக்கிக் கொண்டிருந்தது. ராஜா, மேடையின் ஓரத்தில் அடக்கமாக நின்றுகொண்டிருந்தான்.
சபையிலுள்ளவர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் உணர்ந்தபோது சங்கோசமும் கூச்சமும் அவனைச் சூழ்ந்துகொள்ளவே, திரைக்குப் பின்னால் மறைந்து கொண்டான்.
முதலில், டாக்டர் குமாரி பார்வதி - சாரதாமணிக் கல்லூரியின் தலைவிதான் மேடைமீது பிரசன்னமானாள். பின்னோடு நீதிபதியும் சேதுபதியும் தொடர்ந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்கள்.
’இறை வணக்கம்’ என்று பார்வதி நிகழ்ச்சி நிரலை எடுத்துப் படித்ததும், பாரதியும் இன்னொரு மாணவியும் மேடைமீது வந்து பாடத் தொடங்கியதும் எல்லோரும் எழுந்து நின்றார்கள்.
அடுத்தாற்போல் தலைவர்களுக்கு மாலை போடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த ஒரு சின்னக் காரியத்துக்காக ராஜா, தன்னைக் காலையிலிருந்தே தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான். கடைசியில் பிரின்ஸிபால் பார்வதி பேசுவதற்காக எழுந்து நின்றபோது, சபையில் எழுந்த கரகோஷ ஆரவாரம் அடங்க ஐந்து நிமிஷ நேரம் ஆயிற்று.
"இவ்விழாவுக்குத் தலைமை தாங்க இசைந்துள்ள நீதிபதி அவர்களே! ஹாஸ்டலைத் திறந்து