சொற்பொழிவு நிகழ்ச்சி முடிந்து, கலை விழா ஆரம்பமாவதற்குள் மணி எட்டரை ஆகிவிட்டது. பிரின்சிபால் பார்வதி முன்வரிசையில் போடப்பட்டிருந்த சோபாக்களில், தலைவர்களை அமரச் சொல்லித் தானும் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.
கலை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது, சேதுபதி அடிக்கடி தம் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்வதி கவனிக்கத் தவறவில்லை. மணி ஒன்பதுக்கு சேதுபதி இருக்கையை விட்டு எழுந்து வெளியே புறப்பட்டபோது, குழுமியிருந்தவர்கள் அத்தனை பேருடைய பார்வையும் அவர் மீதே பதிந்தது.
பின்னோடு எழுந்த பார்வதி வாசல் வரை சென்று அவரை வழி அனுப்பிவிட்டு வந்தாள்.
அவர் போன பிறகு விழாவே சாரமற்ற ஒரு சடங்காகப் போய்விட்டது அவளுக்கு. திரும்பி வந்து பழையபடியே தன் இருக்கையில் அமர்ந்தாள். நிலைகொள்ளவில்லை. பாரதியின் குறத்தி நடனம் நடந்து கொண்டுதானிருந்தது. ஆயினும் பார்வதியின் நினைவெல்லாம் அவரைப்பற்றியே சுழன்று கொண்டிருந்தது. அவர் சொற்பொழிவில் குறிப்பிட்ட கருத் துக்களை எண்ணி எண்ணி வியந்து கொண்டிருந்தாள். 'எவ்வளவு உயர்வான பேச்சு! எத்தகைய பெருந்தன்மை யான நோக்கம் அவர் பக்கத்தில் அமர்ந்திருக்கும்போது நாமே இமாலயம் போல் உயர்ந்து விட்டதாக அல்லவா எண்ணுகிறோம். அவர் எழுந்து சென்றதும், எவ்வளவு சிறியவர்களாகி விட்டோம்?'
அவர் அமர்ந்திருந்த, இப்போது காலியாக வெறிச் சோடிக் கிடந்த அந்த நாற்காலியைப் பார்த்தாள் பார்வதி. சட்டென அவள் முகத்தில் வியப்புக்குறி தோன்றியது. அடுத்த கணம் அவள் இதழ்களில் தவழ்ந்த புன்முறுவல் மாயமாய் மறைந்தது. அவள் உள்ளம் உடனே விமான நிலை யத்தை அடைந்தது.
அரை மணி நேரத்திற்கெல்லாம் விழா முடிவு பெற்றது. தலைமை தாங்கிய கனம் நீதிபதியும் விடைபெற்றுக்கொண்டு விட்டார். கூட்டத்தினர் ஒவ்வொருவராக வந்து பார்வதி யிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டார்கள்.
அமைதியற்ற நிலையில், பரபரக்கும் உணர்ச்சியுடன், தவித்துக்கொண்டிருந்த பார்வதி, அவர்களுக்கெல்லாம் இயந்திரம் போல் பதில் கூறி அனுப்பிவிட்டு, அவசரம் அவசரமாகத் தானே காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்தை நோக்கி வேகமாகச் செலுத்தினாள். போகும் போது அவள் மனம் எண்ணமிட்டது.
"இப்போது நான் விமானக்கூடத்தில் அவரைச் சந்திப் பேன் என்று அவர் எதிர்பார்க்கவே மாட்டார். என்னைக் கண்டதும் என்ன நினைத்துக் கொள்வார்! நானும் எங்காவது வெளியூருக்குப் போவதாக எண்ணிக் கொள்வாரோ? அல்லது, என்னைக் கண்டதும் வியப்பை