in Anthropology போன்ற நீண்ட பட்டங்களைப் பெற்றிருந்த அறிவாளி பார்வதிக்கு அப்போதிருந்த மனநிலையில் இந்தச் சின்ன விஷயம்கூடத் தெரியாமற் போயிற்று! தனக்குத் தானே அனுதாபத்துடன் ஒரு முறை சிரித்துக்கொண்டவளாய், மேஜை மீதிருந்த காலைப் பத்திரிகையை எடுத்துப் புரட்டினாள். அதிலிருந்த எழுத்துகள் நீரிலே கரைந்தவை போல் தெளிவின்றித் தெரிந்தன.
"ஓ! கண்ணாடி அணிந்து கொள்ளாமல் அல்லவா படிக்கிறேன்?' என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு கண்ணாடியை எடுத்துப் போட்டுப் பார்த்தபோது எழுத்துகள் மணி மணியாய்ப் பளிச்சிட்டன.
'நிஜமாகவே எனக்கு வயதாகி விட்டதா? இல்லை; இல்லவே இல்லை. வயது, வாலிபம் வயோதிகம் என்பதெல் லாம் நாமாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு வரம்பு தானே?’
மேஜை மீது கிடந்த ஸ்கேல் ஒன்று அவள் கண்ணில் படவே, அதைக் கையில் எடுத்துத் தன் இடது உள்ளங் கையை அதனால் தட்டியபடியே, 'இதோ இந்த அங்குலம் காட்டு மரச் சட்டத்தில் நாமாகவே கோடுகளைப் போட்டு இதை ஸ்கேல் என்று கூறுகிறோம். இந்தக் கோடுகள் நாம் போட்டவை, இவை இல்லையென்றால் இது வெறும் மரச் சட்டம்தானே?’
’அதைப் போலவே நாமாகவே நம் ஆயுளை வயதுகளால் வகுத்து வரம்பு கட்டிக் கொண்டிருக்கிறோம். அந்த வரம்புகள் இல்லையென்றால், நாம் நாமாகவே தான் இருப்போம் வயதாகி விட்டது என்பதை நாம் எப்போது உணர்கிறோம். நம் வயதைப் பற்றிச் சிந்திக்கும்படியான காரியங்கள் குறுக்கிடும்போதுதான். இப்போது ஏதோ ஓர் உணர்வு என் உள்ளத்தில் புகுந்திருக்கிறது. அந்த உணர்வே என் வயதைப் பற்றிச் சிந்திக்கத் தூண்டுகிறது. இத்தனை காலமும் அந்த உணர்வு என்னிடம் இல்லாததால் என் வயது பற்றிய எண்ணமே எனக்குத் தோன்றவில்லை. கோலி விளையாடும் ஏழு வயதுச் சிறுவனைக் காணும்போது தெருவில் நடந்து செல்லும் வாலிபன் தனக்கு வயதாகி விட்டதாக எண்ணுகிறான். கல்லூரியில் படிக்கும் மாணவனைப் பார்க்கும்போது காரியாலயத்தில் வேலை செய்யும் குமாஸ்தா தனக்கு வயதாகி விட்டதென்று கருதுகிறான். ஆகவே, ஏதோ ஒன்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் வயது பற்றிய சிந்தனை நமக்கு ஏற்படுகிறது.
புத்தகப் படிப்பிலேயே இதுகாறும் இரண்டறக் கலந்து கிடந்த பார்வதிக்குத் தன் வயது பற்றிச் சிந்திக்கும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. படிப்புக்கும், ஆராய்ச்சிக்கும் வயது இடையூறாக இருப்பதில்லை. உண்மையில் வயது ஆக ஆகத்தான் அறிவு விசாலமடைகிறது. அறிவின் விசாலம் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. எனவே வயதாகிறதே என்ற எண்ணமே தோன்றுவதில்லை.
சுருதி சுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த பார்வதியின் வாழ்க்கையில் ஏதோ ஒன்று