Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 04 - சாவி
கல்லூரி ஆண்டு விழா முடிவுற்று ஐந்து நாட்கள் கூட ஆகவில்லை. பாரதியும் ராஜாவும் இதற்குள் மூன்று முறை சந்தித்து விட்டதுமன்றி வெகுநாளைய சிநேகிதர்களைப்போல் பழகவும் தொடங்கிவிட்டனர்.
அவர்களுடைய சந்திப்புகள் முன் கூட்டியே பேசி வைத்துக்கொண்டவை அல்ல. ரகசியமானதும் அல்ல. இயற்கையாக, சகஜமாக அவர்களே எதிர்பாராமல் ஏற்பட்டவை தான். ஒருவரையொருவர் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அவர்கள் உள்ளத்தில் இருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அதற்காக அவர்கள் எவ்வித முயற்சியும் எடுத்துக் கொள்ளவில்லை.
வெள்ளிக்கிழமையன்று கூட வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டு, வெளியே போக வேண்டுமெனப் பாரதி எண்ண வில்லை. அப்படிச் செல்வது அவள் வழக்கமுமில்லை. அன்று அவளைத் தூண்டி இழுத்தவள் அதே கல்லூரியில் வேறொரு பிரிவில் படிக்கும் அவளுடைய சிநேகிதி மிஸ் டூலிப்தான். அந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணுக்கு அன்று பிறந்த தினமாகையால், பாரதியை அவள் ஐஸ் கிரீம் பார்லருக்கு வர-வேண்டுமென்று கட்டாயப்படுத்தினாள்.
”இன்று என்னுடைய 'பர்த்டே'; உனக்கு ஆல்மண்ட் க்ரீம் வாங்கித் தரப்போகிறேன். அப்புறம் இரண்டு பேரு மாகச் சினிமாவுக்குப் போகலாம்'' என்றாள் டூலிப்.
ஐஸ்கிரீம் ஆசை எந்தப் பெண்ணைத்தான் விட்டது? 'ஆல்மண்ட் க்ரீம்' என்றதுமே பாரதி நாக்கில் ஜலம் ஊற, 'ஹய்யா... வெரிகுட்!' என்றாள். அப்புறம் சினிமாவுக்கும் போகலாம் என்று டூலிப் கூறிய போது, "என்ன பிக்சர்?'' என்று கேட்டாள் பாரதி.
''லவ் ஆன் தி ஹவாய் பிரிட்ஜ்,'' என்றாள் டூலிப்.
படத்தின் பெயர் கவர்ச்சிகரமாகத்தான் இருந்தது. ஆனாலும் பிரின்ஸிபாலுக்குத் தெரிந்துவிட்டால் என்பதை எண்ணியபோது பாரதிக்குப் பகீர் என்றது.
”எனக்கு இப்போது ஜாக்ரபி க்ளாஸ் இருக்கு டூலிப்! எக்ஸ்க்யூஸ்மி” என்றாள் பாரதி.
”பரவாயில்லை; ப்ளீஸ் ;.... ப்ளீஸ்!” என்று மன்றாடிய படியே பாரதியின் கரங்களைப் பற்றி இழுத்தாள் டூலிப்.
"அப்படியானால் ஒரு கண்டிஷன். சினிமாவுக்கு நான் தான் டிக்கெட் வாங்குவேன்'' என்றாள் பாரதி.
"ஓ எஸ்'' என்று ஒப்புக் கொண்டாள் டூலிப்.
இருவரும் பார்லருக்குச் சென்று ஆளுக்கு இரண்டு கப் ஐஸ்க்ரீமைத் தீர்த்துக் கட்டிய பிறகு, அடுத்தாற்போலிருந்த சினிமாத் தியேட்டருக்குள் நுழைந்தார்கள். பாரதி தான் டிக்கெட்