கொண்டிருந்தபோது, டெலிபோன் மணி அடிக்கவே அவர் பாரதியை அழைத்து,
”டெலிபோனில் கூப்பிடுவது யாரென்று பார்” என்றார்.
பாரதி டெலிபோன் ரிஸீவரைக் கையில் எடுத்துக் கேட்டபோது, 'பிரின்ஸிபால் பார்வதி பேசுகிறேன்' என்று பதில் வந்தது.
தன் குட்டு வெளிப்பட்டு விட்டதோ என்று பாரதி நடுங்கிப் போனாள்.
""அப்பா வீட்டில் இருக்கிறாரா? பார்வதி கேட்டாள்.
''கொஞ்சம் வேலையாக இருக்கிறார். உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று அடக்கமாகக் கேட்டாள் பாரதி.
''நான் இப்போது வந்தால் அவரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டுச் சொல்.”
”கொஞ்சம் இருங்கள் மேடம்! இதோ கேட்டுச் சொல்கிறேன்...”
பாரதி தன் தந்தையிடம் ஓடிப்போய், "அப்பா, பிரின்ஸி பால் உங்களைச் சந்திக்க வேண்டுமாம். இப்போது வரலாமா என்று கேட்கிறார்.... நீங்கள் கொஞ்சம் வேலையாக இருப்பதாகச் சொன்னேன்..”
”ஆமாம், இப்போது எனக்கு நேரமில்லை, அப்புறம் பார்க்கலாம்” என்று அப்பா பதில் கூறிவிடுவார் என்று அவன் எதிர்பார்த்தாள்.
ஆனால் சேதுபதியோ அப்படிக் கூறாமல், ''வரச் சொல்லேன்'' என்றார்.
ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சேதுபதியைச் சந்திக்க விரும்பினாள் பார்வதி.
நேற்று பாரதி ஜாக்ரபி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டுப் போனதில் பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி! அதையே காரணமாக வைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து விடலாமல்லவா!
திருவாளர் சேதுபதியின் உள்ளத்திலும் பார்வதியைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளுறக் கனிந்து கொண்டிருந்தது. பாரதிக்கு டியூஷன் ஏற்பாடு செய்யச் சொல்லும் சாக்கில் பார்வதியை வீட்டுக்கு அழைக்கலாமா என்றுகூட அவர் எண்ணியதுண்டு. ஆனால் எந்த ஒரு எண்ணத்தையும் செயலுக்குக் கொண்டு வருமுன் அதைப்பற்றி ஆயிரம் முறை சிந்திப்பது அவருடைய வழக்கமாயிற்றே! அப்போது பார்வதியே போன் செய்து வரட்டுமா என்று கேட்கவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ’வரச் சொல்லேன்’ என்று கூறிவிட்டார்.
யாருடைய வரவையும் அவ்வளவு ஆவலுடன் எதிர் பார்க்காத அவருக்கு, பார்வதி வரப் போகிறாள் என்னும் செய்தி மட்டும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது சேதுபதிக்கே வியப்பாக இருந்தது.
பார்வதி அறைக்குள் நுழையும்போதே ''ஓ! வாருங்கள்" என்று வரவேற்று, எதிரிலுள்ள