அது தானாகவே அழிந்து போகிற கீறல் அல்ல; அவளாக அழித்துவிடக் கூடியதும் அல்ல, அவள் இதயத்தின் பூவிதழ் போன்ற பட்டுத் துகிலில் அந்தக் கீறலைப் போட்டவர் வேறு யாருமல்ல; திருவாளர் சேதுபதி அவர்கள் தான்.
மணி ஐந்தடித்ததுதான் தாமதம். கல்லூரி மாணவிகள் அனைவரும் பட்டாம் பூச்சிகளைப்போல் தெரு வாயிலை நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள்.
பாரதி மட்டும் உற்சாகமின்றிப் பிரின்ஸிபால் பார்வதியின் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள்.
காரணம், கல்லூரி முடிந்ததும், தன்னுடைய அறைக்கு வந்துவிட வேண்டும் என்பது பார்வதியின் கட்டளை.
பாரதியைக் கண்டதுமே, ”என்ன புறப்படலாமா?” என்று கேட்டாள் பிரின்ஸிபால்.
'கணக்கில் வீக்! கல்லூரி ஹாஸ்டல் தோழியுடன் படித்துக் கொண்டிருந்தேன்' என்று தந்தையிடம் கூறிய ஒரு சின்ன பொய், இவ்வளவு விபரீதத்தில் கொண்டுவிடும் என்று பாரதி கனவிலும் கருதவில்லை.
போலீஸ் காவலுடன் சிறைக் கூடத்துக்குச் செல்லும் கைதியைப் போல், மெளனமாகக் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பாரதி. அடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே அந்தக் கார் சேதுபதி அவர்களின் பங்களாவில் போய் நின்றது.
காரை விட்டுக் கீழே இறங்கும்போதே அவ்விருவர் கண்களும் ’அவர் இருக்கிறாரா’ என்று அறிந்துகொள்ளும் ஆவலில் சேதுபதியின் அறையைத் துழாவின. இருவருடைய ஆவலும் இரு வகையானவை. அ’வர் இருக்கமாட்டாரா?’ என்ற ஆவலில் பார்த்தாள் பார்வதி. ’அவர் இருக்கக் கூடாதே!'' என்ற கவலையுடன் நோக்கினாள் பாரதி! வித்தியாசம் அவ்வளவுதான்!
”அப்பாவின் அறையில் உட்கார்ந்து கொள்ளுங்கள் மேடம். இதோ வந்து விடுகிறேன்...'' என்று கூறிச் சென்றாள் பாரதி.
தனிமையில் அந்த அறைக்குள் காலடி எடுத்து வைத்த போது, ஒரு கோயிலின் கர்ப்பக் கிரகத்துக்குள் செல்வது போல் அச்சம் ஏற்பட்டது பார்வதிக்கு.
அறைக்குள்ளிருந்த திருவாளர் சேதுபதி அவர்களுடைய மனைவியின் திருவுருவப் படம், அமைதி நிறைந்த அந்த அழகு வடிவம், பார்வதியைப் பார்த்துக் கேட்டது ! 'என்னுடைய கணவரின் அன்புக்குப் பாத்திரமாகப் பார்க்கிறாயா, அம்மா?’
உருவம் பேசவில்லை. அப்படி ஒரு பிரமை பார்வதிக்கு. சட்டென அவ்வறையை விட்டு வெளியேறிய பார்வதியின் முகத்தில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாக அரும்பி யிருந்தன.
”ஏன் மேடம், உங்களுக்கு இப்படி வியர்த்து விட்டது. விசிறியின் ஸ்விட்சைப் போடட்டுமா”