சற்று மந்தம். செவிச் செல்வத்தைத் தவிர மற்ற செல்வங்களை யெல்லாம் பெற்று வாழ்க்கையின் இன்பங்களை யெல்லாம் ஆண்டு அனுபவித்து ஏகாங்கியாக வாழ்பவர் அவர். உற்றார் உறவினர்களிடம் ஒட்டுதல் இன்றி, பற்றற்ற ஞானிபோல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வயோதிகருக்கு ஆண்டவன் இப்படி ஒரு பொறுப்பை அளித்திருந்தான். ஆனாலும் பார்வதி அவருக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. காலையிலும் மாலையிலும் தன் கல்லூரித் தோழிகள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். விசித்திரமான தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தபோது பார்வதிக்கே வேடிக்கையாக இருந்தது.
'எங்கேயோ பிறந்தேன். எங்கேயோ வளர்கிறேன். நான் ஓர் அநாதை. கன்னிப் பெண்; கலியாணமாகாதவள். என்னிடம் இன்னொரு அநாதைக் குழந்தை! இந்தக் குழந்தைக்கும் எனக்கும் ஆதரவு சாம்பசிவம்.'
'நான் கன்னிப் பெண்ணாக இருந்து கொண்டே, குழந்தைக்குத் தாயாகவும் இருக்க வேண்டும். படித்துக் கொண்டே பணமும் சம்பாதிக்க வேண்டும். தெருவில் செல் லும் வாலிபர்களின் கண் பார்வையிலிருந்து தப்பி வாழவேண்டும். படித்துக் கொண்டே, படித்தபடி பணம் சம்பாதித்துக் கொண்டே, அநாதையாக இருந்து கொண்டே, அநாதையை வளர்த்துக் கொண்டே, கன்னியாக இருந்து கொண்டே, கலியாணம் ஆனவளைப் போல் வாழ்ந்து கொண்டே, தேவி!... இதென்ன விசித்திர வாழ்க்கை ! யாருக்காக நான் வாழ்கிறேன்? எதற்காக வாழ்கிறேன்?'
'அப்பா, நான் டியூஷனுக்குப் போகிறேன்' என்று குழந்தையை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு புறப்பட் டாள் பார்வதி.
சாம்பசிவம் சிரித்தார். அந்தச் சிரிப்பிலே வேதனையும் வருத்தமும் கலந்திருந்தன.
"போகிற இடங்களுக் கெல்லாம் இந்தக் குழந்தையை யும் கூடக் கூடத் தூக்கிக் கொண்டு போகிறாயே, இதைத் தொட்டிலில் விட்டுச் சென்றால் நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா?" சாம்பசிவம் கேட்டார்.
"தங்களுக்கு எதற்குச் சிரமம், அப்பா! கையோடு இந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு போவது எனக்கு ஒரு விதத்தில் செளகரியமாகவே இருக்கிறது. தெருவில் செல்லும் வாலிபர்கள் என்னைப் பார்க்கும்போது ஒரு தாயைப் பார்ப்பதுபோல் மரியாதை காட்டுகிறார்கள். அவர்களுடைய பார்வை குற்றமில்லாமல் இருக்கிறது. ஆகையால், என் ராஜா என் கன்னிப் பருவத்துக்கு ஒரு கவசமாக இருந்து உதவுகிறான்...."
"நீ ஒரு வேடிக்கையான பெண்!'' என்றார் சாம்பசிவம்.
"ஆமாம், இராமலிங்க சுவாமிகள் சரித்திரம் நீங்கள் படித்ததில்லையா? அவர் முற்றும் துறந்த