முனிவராகப் பற்றற்று வாழ்ந்த காலத்திலும் தன் இடுப்பில் ஒரு சாவிக் கொத்தைச் செருகி வைத்துக் கொண்டிருப்பாராம். வீடோ, வாசலோ, பெட்டியோ எதுவும் இல்லாமல் வெறும் சாவிக் கொத்தை மட்டும் வைத்துக் கொண்டிருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா? மற்றவர்கள் தன்னை உயர்வாக, முற்றும் துறந்த முனிவராக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகத்தான். என் கதையும் ஏறக்குறைய அப்படித்தான். கன்னிப்பெண் என்று என்னை யாரும் எண்ணிவிடக் கூடாது என்பதற்காகவே எங்கே போனாலும் இந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலைகிறேன். என்னைப் பார்க்கிறவர்கள், என்னை ஒரு தாயாகப் பார்ப்பார்கள் அல்லவா?'' என்று கூறிச் சிரித்தாள்.
"இனிமேல் உனக்கு இந்தக் கஷ்டமெல்லாம் இருக்காது. இன்று மாலை நான்கு மணிக்கு எனக்குத் தெரிந்தவர்கள் உன்னைப் பெண் பார்க்க வரப்போகிறார்கள். நான் தான் ஏற்பாடு செய்திருக்கிறேன். பெரிய பணக்கார இடம். பையன் பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். ராஜா மாதிரி கண்ணுக்கு லட்சணமாக இருப்பான். நீ என் பேச்சைத் தட்ட மாட்டாய் என்ற நம்பிக்கையில் அவர்களை வரச் சொல்லி-யிருக்கிறேன். கலியாணமே வேண்டாம் என்று சொல்லக்கூடாது. சொன்னால் இன்று முதல் நான் உன்னுடன் பேசவே மாட்டேன்...''
பலமான பீடிகையுடன் பார்வதி மறுத்துக்கூற முடியாதபடி விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டார் சாம்பசிவம்.
அன்று மாலையே சாம்பசிவத்துக்குத் தெரிந்த நண்பரும் அவருடைய மனைவியும் ஒரு வாலிபனுடன் பார்வதியைப் பார்க்க வந்திருந்தார்கள்.
"இவன் என்னுடைய சகோதரியின் மகன் இவனுக்குத் தாயார் தகப்பனார் இல்லை. என் சொத்தெல்லாம் இவனுக்குத்தான் எழுதி வைக்கப் போகிறேன். பி.ஏ. படித்துக் கொண்டிருக்கிறான். பெயர் சேதுபதி...'' என்றார் பிள்ளைக்கு மாமா.
பலகாரங்களையும் தானே தயாரித்த காப்பியையும் கொண்டுவந்து அவர்கள் மூவருக்கும் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்தாள் பார்வதி.
"இவள் என் வளர்ப்பு மகள். ரொம்பக் கெட்டிக்காரி ; பெயர் பார்வதி. ' என்று பெண்ணை அறிமுகப்படுத்தி வைத்தார் சாம்பசிவம்.
"பெண் அடக்கமாக இருக்கிறாள்'' என்றார் பிள்ளைக்கு மாமா.
''பிராப்தம் இருந்தால் நடந்துவிடுகிறது'' என்றாள் பிள்ளைக்கு மாமி.
பிள்ளையும் பெண்ணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அந்தரங்கமான மெளன மொழியில் பேசிக் கொண்டார்கள். அந்த ஒரு விநாடியிலேயே ஒருவர் மீது
ஒருவர் காதல் கொண்டார்கள் என்று கூடக் கூறலாம்.
''காப்பி முதல் தரமாயிருக்கிறது'' என்று பையன் நாசுக்காகத் தன் உள்ளத்தைச் சொல்லி