Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 07 - சாவி
சுழல் நாற்காலியில் சாய்ந்த வண்ணம், மேஜை விளிம்பைக் கால்களால் உந்தி முன்னும் பின்னுமாக ஆடியபடியே தீவிரச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் சேதுபதி, கல்கத்தாவிலுள்ள ஒரு வர்த்தக ஸ்தாபனத்துடன் 'டிரங்' டெலிபோன் மூலம் தொடர்பு கொள்வதற்காகக் காத்திருக்கும் போது அந்தப் பொன்னான நேரத்தை வீணாக்காமல் தம்முடைய மோட்டார் தொழிற்சாலையின் எதிர்காலத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தார்.
யோசனையின் தீவிரத்தில் அவர் தம்முடைய அகன்ற நெற்றிக்கும் வலது உள்ளங்கைக்குமிடையே சிக்கியிருந்த பென்சிலை இப்படியும் அப்படியும் உருட்டிக் கொண்டிருந்த சமயம், ''அப்பா! இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள்!' என்று குதூகலத்தோடு கூறிக்கொண்டு அவருடைய அருமை மகள் பாரதி அவர் எதிரில் வந்து நின்றாள்.
"அப்படியா? ரொம்ப சந்தோஷம்! இன்றைக்கு உனக்கு எத்தனையாவது பிறந்த நாள்?'' சேதுபதி கேட்டார்.
"இருபதாவது...''
''வெரிகுட்! உன் அத்தையிடம் சொல்லி முதல் தரமான விருந்து தயாரிக்கச் சொல்லு.... உனக்குப் பால் பாயசம் ரொம்பப் பிடிக்குமே! உன் சிநேகிதிகளை யெல்லாம் சாப்பிடக் கூப்பிடுவதுதானே?''
"கூப்பிடாமல் இருப்பேனா? அவர்கள் எல்லோரும் மாடி யில் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பத்து நிமிஷத்தில் விருந்து தயாராகிவிடும். அப்பா ! நீங்களும் இன்று என்னோடு சாப்பிட வேண்டும்...''
"அப்படியா சங்கதி? எல்லா ஏற்பாடும் நடந்து கொண்டிருக்கிறதா? இந்த வீட்டில் நடப்பது ஒன்றுமே எனக்குத் தெரிவதில்லை...''
"உங்களுக்குத்தான் எதிலேயுமே அக்கறை கிடையாதே! எந்த நேரமும் வேலைதான். அதே ஞாபகம்தான்! உங்க வயசே உங்களுக்கு நினைவில் இருப்பதில்லையே!@
"நான் எல்லாவற்றையும் மறந்து விடுகிறவன் என்று தீர்மானித்துவிட்டாயா? சின்ன வயசிலே நடந்ததெல்லாம் கூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் பிறந்தபோது எனக்கு வைத்த பேரைக்கூட. இன்னும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறேன், தெரியுமா?....''
"அடேயப்பா! ரொம்ப ஆச்சரியமாயிருக்கே! அது சரி ; உங்களுக்கு இப்போது என்ன வயசாகிறது தெரியுமா?....''
"அதுதான் மறந்து போச்சு. உள்ளே போய் அத்தையைக் கேட்டுப் பாரு. சரியாகச் சொல்லுவாள். அவளைவிட எனக்கு நாலு வயசு கூட. அவளுக்கு இப்போ...''
@நாற்பத்தெட்டு ஆகிறது.''