மட்டும் எப்படி வந்தன? இந்த முதிர்ந்த பிராயத்தில் உடல் உறவு சம்பந்தமான இச்சைகளுக்கெல்லாம் முடிவு காண வேண்டிய பருவத்தில் இந்த மயக்கம் எதற்கு?
ஆற்றலும் அனுபவமும் மிக்க சேதுபதி, திடசித்தம் வாய்ந்த இலட்சியவாதி தடுமாறி நின்றார். மனைவியின் படத்தைக் கண்டபோது அவருக்குப் பழைய நினைவுக-ளெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, தாய்ப்பாசம் ஒன்றையே ஆதரவாகக் கொண்டு வாழ்க்கையில் பெரும் போராட்டங்கள் நிகழ்த்தி வெற்றி கண்டவர் அவர். உழைப்பால் உயர்ந்த உத்தமர். சரஸ்வதியை மணந்த பின்னரே, அவருடைய வாழ்க்கை விரிவாக மலரத் தொடங்கியது. ஆயினும், அந்த வாழ்வின் பூரண இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை அவளுக்கு. பாரதியைப் பெற்றெடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் அவள் காலமாகி விட்டாள். அதற்குப் பிறகு சேதுபதி இல்லற வாழ்க்கையில் விரக்தி அடைந்து மறுமணம் செய்து கொள்வதில்லை என்ற முடிவுடன் வைராக்கிய புருஷராக இருந்து விட்டார்.
அடுத்த ஆண்டிலேயே அவருடைய தங்கை சாரதாம்பாள் கட்டிய கணவனை இழந்து கைம்பெண்ணாகிக் கண்ணிரும் கம்பலையுமாகச் சேதுபதியின் வீட்டோடு வந்து சேர்ந்தாள். ஆதரவற்றுக் கிடந்த சேதுபதியின் குடும்பப் பொறுப்பை அவளே ஏற்க வேண்டியதாயிற்று. சமயம் நேரும்போதெல்லாம் அவ்வப்போது சேதுபதியை மறுமணம் செய்து கொள்ளும்படி அவள் தூண்டிக் கொண்டிருந்தாள். சேதுபதி அதற்கு இணங்கவில்லை.
''குழந்தை பாரதியிடம் அன்பும் ஆதரவும் காட்டி வளர்க்க நீ இருக்கும்போது நான் எதற்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும்?'' என்று கூறிவிட்டார்.
அந்தப் பிடிவாதம், தீவிர விரதம், திடசித்தம், உறுதி மொழி எல்லாம் இப்போது பார்வதியின் முன்னால் ஆட்டம் கண்டுவிட்டன.
நினைவுச் சுழலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து நின்றார். சேதுபதி. 'பார்வதி வரும் நேரமாகிறது. இந்த நேரத்தில் நான் இங்கே இருப்பதைக் கண்டால் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதாக அல்லவா எண்ணுவாள்? அம்மாதிரி அவள் தன்னைப்பற்றி எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது. அவள் வருவதற்குள் நான் வெளியே போய் விட வேண்டும். அப்போது என்னைப்பற்றி பாரதியிடம் விசாரிப்பாள். மாலையில் டியூஷனுக்கு வரும்போது காலையில் சந்திக்க முடியவில்லையே' என்று என்னிடம் கூறுவாள். தன் மீது அவள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அப்போது அவள் முகத்தில் வெளிப்படும்.'