ஆசையின் படிகளுக்கோ ஒரு முடிவே இல்லை...."
எல்லாமே விளங்கிவிட்டது போல் தன்னுடைய சந்தேகங்கள் அனைத்துக்குமே விடை கிடைத்துவிட்டது போல் நிறைவு ஏற்பட்டது அவளுக்கு.
எப்படியும் தன் எண்ணத்தை - நீண்ட நாளைய விருப்பத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பார்வதி, அவருடைய பேச்சில் மயங்கி தன்னை மறந்தவளாய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றவளாய் உட்கார்ந்திருந்தாள்.
டெலிபோன் மணி ஒலித்தது. சேதுபதி ரிலீவரை எடுத்துப் பேசினார். அந்தக் குழலில் வந்த செய்தியைக் கேட்டதும் அவர் முகம் மாற்றமடைந்ததைப் பார்வதி கவனிக்தாள்.
"என்ன, பஞ்சுத் தொழிற்சாலையில் தீயா? இரண்டு லட்சமா? உயிர்ச்சேதம் ஒன்றுமில்லையே? என்று கேட்ட சேதுபதி ரிஸிவரைக் கீழே வைத்துவிட்டு, நல்ல வேளை! உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையாம்! இரண்டு லட்சம் ரூபாய் சேதமாம் ! பரவாயில்லை; இன்ஷர் செய்யப்பட்டிருக்கிறது...'' என்று சர்வ சாதாரணமாகக் கூறினார்.
தீ என்ற சொல் கேட்டுத் துணுக்குற்ற பார்வதி, "தீயா? யாருடைய பஞ்சாலையில்?'' என்று விசாரித்தாள்.
"என்னுடைய பஞ்சாலையில் தான்'' என்றார் சேதுபதி மிக அமைதியாக.
இரண்டு லட்சம் என்ற வார்த்தை அவரை அசைக்க வில்லை. உயிர்ச் சேதம் உண்டா ?' என்றுதான் விசாரித்தார்.
உயிரின் மதிப்புக்கும் பொருளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனால் தான் பொருள் நஷ்டத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லை.
பார்வதி சிரித்தாள்.
அதைக் கண்ட சேதுபதி அவள் சிரிப்பதன் காரணத்தைப் புரிந்துகொண்டு புரியாதவர் போல், "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
''எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பஞ்சாலையே தீப்பற்றி எரிந்து போய்விட்டது என்று அறிந்தும் தாங்கள் கொஞ்சம்கூடப் பரபரப்படையவில்லை. இரண்டு லட்சம் நஷ்டம் என்று தெரிந்தும் சர்வ அலட்சியமாக இன்ஷர் செய்யப்-பட்டிருக்கிறது...' என்று கூறிப் பேசாமலிருந்து விட்டீர்களே! அந்த நஷ்டம் இன்ஷூரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தது என்பதால் தானே, இல்லையா?" என்று கேட்டாள்.
"இல்லை; நஷ்ட ஈடு கொடுக்க வேண்டிய அந்த இன்ஷன் ரன்ஸ் கம்பெனியும் என்னுடையதுதான்" என்றார் சேதுபதி.
பார்வதி திகைத்தாள்.