(Reading time: 10 - 20 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

''கடவுள் கடல் நீரை உப்பாகப் படைத்ததற்குக் காரணம் சொல்லாவிட்டால் நான் உங்களுடன் டூ" என்றாள் பாரதி.

"இரண்டு பேர் சேர்ந்தால் நீ தான். தனியாக இருந்தால் ஒன்...'' என்று கூறிய ராஜா, "நாமெல்லாம் ஆண்டவனிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதற்குத்தான். ஒரு வேளை உணவு படைப்பவர்களை உப்பிட்டவர்கள் என்று கூறி அவர்களை உள்ளளவும் நினை என்கிறோம். கடவுள் இந்த உலகத்து மக்களுக்கெல்லாம் உணவைப் படைத்து வைத் திருக்கிறார். அந்த உணவுக்கு வேண்டிய உப்பையும் படைத்து வைத்திருக்கிறார். உலகத்தில் வாழும் உயிர்களுக் கெல்லாம் உப்பிட்டு வரும் அந்தக் கடவுள், கடல் நீரில் கலந்திருக்கும் உப்பைப் போலவே நம் கண்ணுக்குப் புலனாகாத சூட்சும வடிவத்தில் இருந்து வருகிறார்'' என்றான்.

பாரதி ராஜாவையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

''என்ன பாரதி! அப்படிப் பார்க்கிறாய்? எனக்கு இவ்வளவு ஞானம் எப்போது வந்துவிட்டது என்றுதானே? இன்று காலையில் தான்.... என் அத்தையின் மேஜை மீது கிடந்த ஒரு புத்தகத்தில் இந்த விஷயத்தை இன்று காலையில் தான் படித்தேன்...'' என்றான் ராஜா.

கையினால் மணலைக் கீறியபடியே, ராஜா கூறிய உயர்ந்த தத்துவத்தை எண்ணி வியந்து கொண்டிருந்த பாரதி சட்டென, "ஐயோ!" என்று அலறியபடி கையை உதறிக் கொண்டாள்.

அவள் வலது கை ஆள்காட்டி விரலில் இரத்தம் பெருகி வழிவதைக் கண்டு பதறிப்போன ராஜா, "என்ன பாரதி, கையை ஏதாவது கீறிவிட்டதா என்ன?" என்று கேட்டான்.

"ஆமாம், கண்ணாடித் துண்டு'' என்று மணலில் புதைந்து கிடந்த ஒரு பெரிய கண்ணாடித் துண்டை எடுத்து ராஜாவிடம் கொடுத்தாள் பாரதி.

"இந்தக் கண்ணாடித் துண்டு உன் கையைக் கீறியதா, அல்லது உன்னுடைய கை கண்ணாடித் துண்டைக் கீறியதா?'' என்று கேட்டான் ராஜா.

சினிமாக்களில் கதாநாயகிக்கு ஏதாவது ஆபத்து நேரும் போது (அது தான் நேருமே), கதாநாயகன் அவளைக் காப்பாற்ற ஓடி வருவான். அச்சமயம், வில்லனுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும். அந்தச் சண்டையில் கதா நாயகன் வெற்றி பெறுவான். உடனே கதாநாயகி, கதா நாயகனைக் காதலிக்கத் தொடங்கி விடுவாள்.

ராஜா தன்னுடைய வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கவில்லை யென்றாலும், அந்தக் கண்ணாடியை ஒரு வில்லனாகவே மதித்து அதைக் கடலில் வீசியெறிந்தான். உடனே எழுந்து சென்று தன்னிடமிருந்த கைக்குட்டையைக் கடல் நீரில் நனைத்து வந்து அவள் கைவிரலைச் சுற்றிக் கட்டினான். இரத்தப் பெருக்கு நின்றது.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.