பெற்றவள் என்பதற்காக மதிப்புக் கொடுக்காமல், அவள் லேடீஸ் கிளப் பிரஸிடெண்-டானவுடன் புகழ்வதைப் போலாகும்.”
இந்த அறிமுகப் பேச்சின் மூலம் சேதுபதியின் உள்ளத்தில் நிரந்தரமான இடத்தைப் பிடித்துவிட்ட பார்வதியை அவர் வெறும் கல்லூரி பிரின்ஸிபாலாக மட்டும் மதிக்க வில்லை. அவளை ஓர் உயர்ந்த பீடத்தில் ஏற்றித் தம்முடைய அந்தஸ்து, கௌரவம், அறிவு, ஆற்றல் இவ்வளவுக்கும் ஈடு கொடுக்கக்கூடிய பெருமை வாய்ந்தவளாகக் கருதினார். அன்று பார்வதி அவரை விமான நிலையத்துக்குத் தேடிச் சென்று மூக்குக் கண்ணாடியைக் கொடுத்தபோது, ஏற்கெனவே அவளைப்பற்றி அவர் கொண்டிருந்த எண்ணம் மேலும் ஒரு படி உயர்ந்துவிட்டது. அவருடைய அந்த மதிப்பீட்டில் பார்வதி உயர்ந்தது மட்டுமல்ல, சேதுபதி தம்மைத்தாமே ஒரு படி தாழ்த்திக்கொண்டார்.
''மூக்குக் கண்ணாடியை மறந்து வந்துவிட்டீர்களே, இது ரொம்ப அவசியமல்லவா? வெளியூருக்குப் போகுமிடத்தில் இது இல்லை யென்றால், முக்கிய காரியம் கெட்டுப் போகுமே வேறு எதை மறந்தாலும் பரவாயில்லை. வேறொன்று உடனே வாங்கி விடலாம். மூக்குக் கண்ணாடியை நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாதே!'' என்று கூறி, அவள் அந்தக் கண்ணாடியை எடுத்து வெகு அலட்சியமாகக் கொடுத்தபோது அவள் முன் நான் எவ்வளவு சிறியவனாகி விட்டேன்? அவள் அந்த நேரத்தில் எவ்வளவு பொறுப்புடன், கண்ணியத்துடன் நடந்து கொண்டாள். நானோ இன்று இன்ஷூரன்ஸ் பற்றிய பேச்சு எழுந்தபோது அவள் இன்ஷூரன்ஸ் கம்பெனிக்கு நஷ்டம் என்று கூறிய தவறைச் சுட்டிக்காட்டி, அவள் குற்றத்தை எடுத்துக்காட்டி அவளைத் திருத்த முற்பட்டேன். அவள் அறியாமையைச் சுட்டிக் காட்டியதும், அவள் தவறைத் திருத்தியதும் சரியாயிருக்கலாம். ஆனால் அவளைத் தாழ்த்தி விட்ட குற்றம் என்னுடையதல்லவா? தெரியாமல் அவள் நஷ்டம் என்று கூறியபோது நான் சிரித்திருக்கக் கூடாதல்லவா? தம்முடைய குணத்தையும் அவளுடைய பண்பையும் ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்ட சேதுபதியின் எண்ணத்தில் பார்வதி மேலும் உயர்ந்து காட்சி அளித்தாள். அவளுக்கு முன்னால் தான் மேலும் ஒரு படி தாழ்ந்து விட்ட தாகக் கருதினார்.
”இனி இம்மாதிரிக் குற்றத்தை ஒரு நாளும் செய்யமாட் டேன். யாரையும் குறை கூறி, அவர்கள் குற்றத்தை உணரச் செய்து, நம்மைக் காட்டிலும் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தை உண்டாக்க மாட்டேன். குறையை நாசூக்காகச் சொல்லித் திருத்தவேண்டும். அதுதான் பண்பு. ஒருவருடைய குறையை எடுத்துக் கூறும்போது, அவர்களைவிட நாம் அறிவாளி என்ற அகம்பாவம் நம் உள்ளத்தில் ஏற்படக்கூடாது. நம்மைவிடச் சிறந்த அறிவாளிகள் இந்த உலகத்தில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் நாம் ஒரு சிறு துரும்பு...'' சேதுபதி ஒரு முடிவுக்கு வந்தார். அந்த முடிவில் அவருக்கு ஒரு நிம்மதி பிறந்தது. அப்படியே தூங்கிப்போனார்.
---------------
தொடரும்