முகத்தில் அறிவின் களை வீசுகிறது'' என்று தனக்குத்தானே திருப்தி அடைந்தாள்.
அடுத்த கணமே அவளுக்கு இன்னொரு எண்ணமும் உண்டாயிற்று.
'வயதைப்பற்றியோ, வசீகரத்தைப் பற்றியோ, இத்தனைக் காலமும் ஏற்படாத கவலைகள் இப்போது மட்டும் தோன்றுவானேன்? என் உள்ளத்தில் எழுந்துள்ள பலவீனமான எண்ணங்களுக்கு இதுவே அறிகுறியாக இருக்கலாமோ?’ என்று யோசித்துப் பார்த்தாள்.
இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? ஆம்; சேதுபதியேதான். அவருடைய அறிவை, உறவை, பரிவை, அன்பு மொழிகளை என் உள்ளம் நாடுகிறது.
என் எண்ணத்தை வெளிப்படையாகக் கூறவும் முடிய வில்லை; மனத்திற்குள்ளே மறைத்து வைக்கவும் இயலவில்லை. சோடாபுட்டியின் நெஞ்சுக்குள் அகப்பட்டுத் தத்தளிக்கும் கண்ணாடிக் குண்டு போல், சேதுபதி பற்றிய எண்ணம் என் நெஞ்சுக்குள் புகுந்து அலைந்து கொண்டிருக்கிறது.
’என் உள்ளத்தை, உள்ளத்தில் புகுந்துகொண்டிருக்கும் இரகசியத்தை அவர் புரிந்து கொண்டிருக்கிறாரா? புரிந்து கொண்டுதான் பேசாமல் மௌனம் சாதிக்கிறாரா? நான் படும் வேதனைகளை அவர் அறிந்து கொண்டிருக்கிறாரா? அல்லது அறிந்து கொண்டுதான் அறியாதவர் போல் நடித் துக் கொண்டிருக்கிறாரா?’
'அவருக்கு என்னிடம் அன்பு இருக்கிறது, அவர் என்னை நேசிக்கிறார். என் உள்ளத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்! ஆமாம்; அதனாலேயே மாலை வேளைகளில் நான் அவர் வீட்டுக்குச் செல்லும் நேரங்களில் எனக்காகக் காத்திருக்கிறார். பாரதியே சொல்கிறாளே, ''கொஞ்ச நாட்களாகத் தான் அப்பா மாலை நேரங்களில் வீட்டில் தங்கியிருக்கிறார் என்று. அதற்கு என்ன காரணம்?' எப்படி யெல்லாமோ பற்பல கோணங்களில் சிந்தித்துப் பார்த்தும், பார்வதியால், நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. சேதுபதி உண்மையிலேயே அவளை நேசிக்கிறாரா இல்லையா என்பதை அவளால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தன் எண்ணத்தை, ஆசையை வெளிப்படுத்த முடியாத நிலைமை ஒரு புறம், அவராகவே தன் நிலையைப் புரிந்து கொண்டும் மௌனம் சாதிக்கிறாரா என்ற சந்தேகம் இன்னொரு புறம். அவருக்குத் தன்னிடம் அன்பு இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொண்டுவிட வேண்டுமென்ற துடிப்போடு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள் பார்வதி. அப்போது மணி ஐந்தரைகூட ஆகவில்லை.
''இந்த நிலையை நீடிக்க விடக்கூடாது. மனத்திற்குள்ளாகவே வைத்துப் புழுங்கவும் கூடாது. இன்று இதற்கு ஒரு முடிவு கண்டுவிட வேண்டும், ஒரு சிறு சோதனையின் மூலம் அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டு விட வேண்டும்'' என்று தீர்மானித்துக் கொண்டான்.