அப்போது அவள் குரல் உற்சாகம் இழந்து தொனிக்கும். அந்தக் குரலில் ஏமாற்றமும், வருத்தமும் கலந்து பிரதிபலிக்கும். அதிலிருந்து அவள் என் மீது கொண்டுள்ள ஆசையும் அக்கறையும் புலப்படும்.
இந்த முடிவுடன் டெலிபோனைக் கையில் எடுத்து பிரின்ஸிபால் பார்வதியுடன் பேசத் தொடங்கினார்.
’ஹல்லோ !' சேதுபதியின் கம்பீரமான குரல் டெலிபோன் குழலில் ஒலித்தபோது பார்வதியின் உடல் ஒருமுறை சிலிர்த்தது.
"சேதுபதி பேசுகிறேன்'' என்று அவர் மேலும் தொடர்ந்தபோது, யாரை நினைத்து நினைத்து இதுகாறும் உருகிக் கொண்டிருந்தாளோ, யாருக்காக என்னென்ன எண்ணமிட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய குரலைக் கேட்க ஏங்கிக் கொண்டிருந்தாளோ, யாருடன் உரையாட ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாளோ, யாருடைய அந்தரங்கத்தை அறியக் காத்துக் கொண்டிருந்தாளோ அந்தக் குரலைக் கேட்டபோது, அவளுடைய உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. தான் எழுதிய கடிதத்தைப் பார்த்து வீட்டுத்தான், அதைப் பார்க்காதவர்போல் டெலிபோன் செய்திருக்கிறார் என்று எண்ணியவளாய்த் தன் உணர்ச் சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மிக அமைதியாக, ”நான் தான் பார்வதி பேசுகிறேன். வணக்கம்" என்றாள்.
'வணக்கம்' என்று பதிலுக்குக் கூறிய சேதுபதி. "ஒன்று மில்லை; இன்றுமுதல் எனக்கு அதிக வேலை இருக்கிறது. புதிய தொழிற்சாலை ஒன்று தொடங்கப் போகிறேன். ஆகையால், மாலை வேளைகளில் இனி ஓய்வு இருக்காது. வீட்டுக்குத் திரும்பி வர ஒன்பதாகிவிடும். பாரதியைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுடையது. இதைச் சொல்வதற்குத்தான் கூப்பிட்டேன்.”
"அப்படியா! ஆகட்டும்” பார்வதியின் குரலிலிருந்து சேதுபதியால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
சேதுபதி அன்று மாலை வீட்டுக்குத் திரும்பி வந்தபோது மேஜையின் மீது பார்வதியின் கடிதம் அவருக்காகக் காத்திருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தவர், 'பார்வதி என்னிடம் டெலிபோனில் பேசிய பிறகே, எனக்கு இக்கடிதத்தை எழுதியிருக்க வேண்டும். என்னிடம் அவளுக்குள்ள அன்பு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே டெலிபோனில் பேசுவதற்கு முன்பே கடிதம் எழுதியிருப்பது போல் எழுதியிருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டார்.
சேதுபதி தன் கடிதத்தைக் கண்டுவிட்டே டெலிபோனில் பேசியிருக்கிறார் என்று பார்வதி எண்ணிக் கொண்டதைப் போலவே, பார்வதியிடம் தான் டெலிபோனில் பேசிய பிறகே அவள் கடிதம் எழுதியிருக்கிறாள் என்று சேதுபதி எண்ணிக் கொண்டார்.