அன்று மாலை கல்லூரி விட்டதும், பார்வதி சேதுபதியின் வீட்டுக்குச் செல்லவில்லை.
''பாரதி! இன்று முதல் உனக்கு என் வீட்டில்தான் டியூ ஷன். ஏறிக்கொள் வண்டியில்” என்றாள்.
ஒன்றுமே அறியாத பாரதி, மகிழ்ச்சியோடு காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். பிரின்ஸிபால் வீட்டில் தான் இனி டியூஷன் என்னும் சேதி பாரதிக்கு அளவிலாத மகிழ்ச்சியை அளித்தது.
காரணம், ராஜாவை அங்கே தினமும் சந்திக்கலாம் அல்லவா?
அன்று மணி ஏழரை வரை டியூஷன் நடந்தது. அந்த நேரத்தில் ராஜா குறுக்கும் நெடுக்குமாகப் பலமுறை அலைந்து கொண்டிருந்தான்.
பார்வதியின் மனத்தில் அமைதியில்லை. 'அவசரப்பட்டு சேதுபதிக்குக் கடிதம் எழுதிவிட்டேனே ; தினம் தினம் அவரைச் சந்திப்பதில், அவருடன் பேசுவதில், அடைந்த இன்பமும் ஆறுதலும் இனிக் கிட்டாதே! என்ன அசட்டுத் தனம்! எதற்காகக் கடிதம் எழுதினேன்? அவரை இனி எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு சந்திப்பேன்? சேதுபதி தன்னைவிட்டே நழுவிச் சென்றுவிட்டது போலவும் வெகு தூரத்துக்கு அப்பால், இன்னும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் எல்லை விரிப்பில் ஒரு சிறு புள்ளியைப்போல் அவர் நகர்ந்து கொண்டிருப்பது போலவும் தோன்றியது பார்வதிக்கு.
’டெலிபோனில் எதற்காகப் பேசினேன்? தினம் தினம் அவளைச் சந்தித்து உரையாடி மகிழும் இன்பத்தை நழுவ விட்டுவிட்டேனே! என்ன அசட்டுத்தனம்! தம் செய்கையை எண்ணித் தாமே வருத்தப்பட்ட சேதுபதிக்குப் பார்வதி தன்னைவிட்டு நழுவி விட்டது போலவும், தன்னால் நெருங்க முடியாத தொலைவில், அதற்கும் அப்பால் வான முகட்டின் எல்லையில் ஒரு சிறு புள்ளியாக மாறி நிற்பதைப் போலவும் தோன்றியது.
மணி எட்டு இருக்கும்.
"பாரதி நீ வீட்டுக்குப் போகலாம். எனக்கு உடம்பு சரியில்லை. மற்ற பாடங்களை நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்... ராஜா! பாரதியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு வா” என்றாள் பார்வதி.
அந்த வார்த்தையை எதிர்பார்த்துக் காத்திருந்த ராஜாவுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சினிமா டியூன் ஒன்றைச் சீட்டியடித்துத் தன் உற்சாகத்தை வெளிப்படுத்த எண்ணினான். ஆயினும் உற்சாகத்தை அடக்கிக்கொண்டு, ஓடிப்போய்க் காரின் கதவைத் திறந்து பாரதியை அதில் ஏறிக்கொள்ளச் சொன்னான்.
கார் நகர்ந்து, வாசல் காம்பவுண்டைத் தாண்டி வலது பக்கம் திரும்பியது. அந்தப் பக்கம் தான் சேதுபதியின் வீடு இருந்தது. கடற்கரை இருந்த திசையும் அதுதான்.
------------
தொடரும்