உங்கள் கல்லூரியின் மீது காதல்.”
”உண்மைக் காதலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?....”
”அதுபற்றித் தனிச் சொற்பொழிவே நிகழ்த்த வேண்டும். ஆனாலும் ஒன்று கூறுவேன். காதல் என்பது ஆண் மகனுடைய வாழ்க்கையில் ஒரு பகுதிதான். ஆனால் அதுவே ஒரு பெண்ணின் முழு வாழ்வுமாகும்.''
”மிக உயர்ந்த கருத்து...'' என்று பாராட்டினாள்.
” இக்கருத்து என்னுடையதல்ல. பைரனைப் பாராட்டுங்கள்'' என்றார் வேதாந்தம்.
”அப்புறம்?'' என்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு வேதாந்தத்தையே கூர்ந்து நோக்கினாள் பார்வதி.
”ஒரு பெண்ணின் உள்ளத்தில் காதல் உணர்ச்சி தோன்றும்போது தான் காதலைப் பற்றிய முழுச் சக்தியையும் அவள் அறிய நேரிடுகிறது” என்றார் வேதாந்தம்.
"காதலைப் பற்றி வள்ளுவர்?....''
”நிரம்பச் சொல்லி யிருக்கிறார். அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது,
''காணுங்காற் காணேன் றவராய
காணாக்காற் காணேன் றவறல்லவை”
என்ற குறளாகும். காதலனை நேரில் காணும்போது காதலிக்கு அவனுடமுள்ள குற்றங்கள் எதுவுமே தெரிவதில்லையாம். அவனைக் காணாதபோது அவனிடமுள்ள குற்றங் களைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லையாம்!”
"எவ்வளவு அழகான கருத்து...'' என வியந்தாள் பார்வதி.
"வள்ளுவர் கூறாத கருத்துகளே இல்லை'' என்று மகிழ்ந்தார் வேதாந்தம்.
மெளனத்திலாழ்ந்திருந்த பார்வதி, ஏதோ பேசுவதற்குத் தயங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பால் அறிந்த வேதாந்தம், "ஏதேனும் முக்கிய விஷயமிருந்தால் தயங்காமல் கூறுங்கள்'' என்றார்.
''தாங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துப் பார்க்கவேண்டும். இந்த அற்ப விஷயத்தில் தங்களுக்குத் தொந்தரவு கொடுப்பதற்காக மன்னிக்க வேண்டும்" என்ற பூர்வ பீடிகையுடன் கடிதத்தை எடுத்துக் கொடுத்தாள் பார்வதி.
அதைப் பிரித்துப் பார்த்த வேதாந்தம், "இதையா அற்ப விஷயம் என்று கூறினீர்கள்? இது நம் இரு கல்லூரியையுமே பாதிக்கும் விஷயமல்லவா? இம்மாதிரி விஷயங்களில் நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் கடைசியில் அது நம் கல்லூரிகளுக்கே இழுக்கைத் தேடித் தரும். கல்லூரித் தலைவர்களுக்கு இவை சம்பந்தமற்றவை என்று உதாசீனம் செய்துவிடுவது மிகமிகத் தவறான செயல். இது விஷயத்தில் தாங்கள் எடுத்துக் கொண்ட அக்கறையைப்