பாராட்டுகிறேன். இப்போதே கோபாலனை அழைத்துப் பேசி உண்மையை அறிந்து கொண்டு விடுவோம். சற்று நேரம் தாங்கள் இந்த அறையிலேயே உட்கார்ந்திருங்கள். தங்களை நேரில் வைத்துக்கொண்டு அவனை விசாரிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அவன் என்ன கூறுகிறான் என்பதைத் தாங்களும் கேட்க வேண்டும். ஆகையால், நான் அவனை அடுத்த அறைக்கு வரச்சொல்லி விசாரணை செய்கிறேன். இந்த அறையிலிருந்தபடியே தாங்கள் கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
தலையசைத்தாள் பார்வதி. அடுத்த அறையில் விசாரணை ஆரம்பமாயிற்று.
”கோபால்! உன்னிடம் இன்று சில கேள்விகள் கேட்கப் போகிறேன். எதையும் மறைக்காமல் பதில் கூறவேண்டும். இப்படி உட்கார்ந்து கொள்'' என்றார் வேதாந்தம்.
கோபாலன் உட்காரவில்லை. ”மன்னிக்க வேண்டும்!” என்று கூறித் தன் பண்பை வெளிப்படுத்தினான்.
''உனக்கு என்ன வயதாகிறது கோபால்?"
''இருபத்து மூன்று....?”
''இந்த ஆண்டுடன் உன் படிப்பு முடிந்து விடுகிற தல்லவா?''
”ஆம்...”
''அப்புறம் என்ன செய்யப் போகிறாய்....?”
''ஏதாவது ஓர் அலுவலகத்தில் சேர்ந்து பணி புரியப் போகிறேன்...”
''எப்போது திருமணம் செய்து கொள்ளப்போகிறாய்?''
”என் தந்தை முடிவு செய்யும்போது...''
"உன் தந்தையாகப் பார்த்து முடிவு செய்யும் பெண்ணை மணந்து கொள்ள போகிறாயா? அல்லது...''
”அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார்...”
”அப்படியானால்....!”
"நானாக ஒரு பெண்ணைத் தேர்ந்து மணம் செய்து கொள்வதற்கு அவர் தம்முடைய பூரண சம்மதம் அளிப்பார்...''
”ஒரு வேளை நீ தேர்ந்தெடுக்கும் பெண்ணை அவர் ஒப்புக் கொள்ளவில்லை யென்றால்?....''
”ஒப்புக்கொள்ளமாட்டார் என்று ஏன் சந்தேகப்பட வேண்டும்? பொதுவாக உலகத்தில் நம்பிக்கைதான் முக்கியம். ஆயினும், எல்லாவற்றிலுமே நம்பிக்கை வைத்துவிடக் கூடாது தான். அதற்காக எதையுமே நம்பாமலும் இருக்கக் கூடாதல்லவா?''
”கோபால்! மிக அருமையாகப் பேசுகிறாயே! இதுவரை விளையாட்டிலும் படிப்பிலும் மட்டுமே புத்திசாலி என்று தான் எண்ணிக்கொண்டிருந்தேன். காதல் விவகாரத்திலும் நீ...'' வேதாந்தம்