சிரித்தபடியே கூறினார்.
”காதலா...” கோபாலன் சற்றுத் திகைப்போடு கேட்டான்.
”காதலிப்பது தவறில்லை கோபால்! இதோ பார் இந்தக் கடிதத்தை...''
கடிதத்தை வாங்கிப் படித்த கோபாலன், ''ஐயா, மீனாவை நான் நேசிப்பது உண்மைதான். ஆனால் எங்கள் நட்பில் முறைகேடு எதுவும் கிடையாது. அவளை நான் என் வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்.''
அழுத்தமாகவும் திருத்தமாகவும் பேசினான் கோபால்.
கோபாலனின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கிற்று. அவனை ஒரு முறை கண்ணால் பார்த்துவிட விரும்பிய பார்வதி, கதவின் வழியாக அவனைப் பார்க்கவும் செய்தாள்.
சிரித்த முகத்துடன், மிடுக்கான தோற்றத்துடன் அடக்கமாக நின்று கொண்டிருந்த கோபாலனின் உருவத்தைக் கண்ட பார்வதி, ’மீனாவுக்கு ஏற்ற ஜோடிதான்' என்று மனத்திற்குள்ளாகவே மகிழ்ந்து கொண்டாள்.
"சரி, நீ போகலாம்'' என்று கோபாலனை அவனுடைய வகுப்புக்கு அனுப்பிவிட்டுத் தம்முடைய அறைக்குத் திரும்பி வந்தார் வேதாந்தம்.
வேதாந்தத்தைக் கண்டதும் ”மிக்க நன்றி. தங்களுடைய நேரத்தை வீணாக்கி விட்டதற்காக மன்னிக்க வேண்டும்'' என்று எழுந்து நின்றாள் பார்வதி.
''வீணாக்கி விட்டதாக எப்படிக் கூற முடியும்? பயனுள்ள ஒரு முக்கிய காரியமல்லவா இது?''
பார்வதி பதில் கூறாது புன்முறுவலுடன் நின்று கொண்டிருந்தாள்.
''ஆமாம்; தாங்கள் தமிழில் இவ்வளவு அழகாகப் பேசுகிறீர்களே, எப்போதுமே இப்படித்தான் பேசுவீர்களா?'' வேதாந்தம் விசாரித்தார்.
"இல்லை; தமிழில் பேசினால் தாங்கள் மகிழ்ச்சியுறுவீர்கள் என்பதால் பேசிப் பார்த்தேன். நான் நன்றாகப் பேசுகிறேன் என்பதைக் கேட்க எனக்குப் பெருமையாக இருக்கிறது...'' என்றாள் பார்வதி.
"மீனாவின் தந்தைக்குக் கடிதம் எழுதி, திருமணத்துக்கு வேண்டிய ஏற்பாடு செய்து விடுங்கள். கல்லூரித் தலைவர்கள், மாணவர்களின் கல்வி விஷயத்தில் மட்டும் கருத்தைச் செலுத்தினால் போதாது. அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையிலும் கவனம் செலுத்த வேண்டும்...” சிரித்தபடியே கூறினார் வேதாந்தம்.
"வணக்கம்; நான் வருகிறேன்'' என்று விடைபெற்றுக் கொண்டாள் பார்வதி.
அன்று காலையில் தினப்பத்திரிகை வந்ததும் பார்வதி அவசர அவசரமாக அதைப் புரட்டினாள். பத்திரிகையின் ஏதோ ஒரு மூலையில் வழக்கமாக வரும் ஒரு பகுதியில் அவன் கவனம்