சென்றது. அந்தப் பகுதியிலிருந்த செய்தியைக் கண்டதும், அவள் பெரும் வேதனைக்குள்ளானாள்.
”நேற்றிரவு சேதுபதி பம்பாய்க்குப் பயணமானார்'' என்பதுதான் அச்செய்தி. ஏற்கெனவே அவள் சேதுபதியைச் சந்தித்து நாலைந்து நாட்களாகியிருந்தன. அந்தப் பிரிவுகூட அவளுக்கு வேதனையைத் தரவில்லை. இப்போது தன்னிடம் கூறிக் கொள்ளாமலே அவர், பம்பாய்க்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார் என்னும் தகவலைத்தான் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த உலகமே வெறிச்சென்றாகி விட்டதைப்போல் உணர்ந்தாள். அவர் ஊரிலிருந்தபோது சேதுபதி தன் அருகில் இருந்தது போலவும், இப்போது எல்லாமே தன்னைவிட்டு விலகிச் சென்றுவிட்டது போலவும் உணர்ந்தாள்.
சேதுபதியின் மீது அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.
அடுத்த கணம் ’நான் ஏன் அவரைக் கோபிக்க வேண்டும்? எதற்காக அவர் என்னிடம் சொல்லிக்கொண்டு போக வேண்டும்? எனக்கும் அவருக்கும் என்ன உறவு? அன்று என்னுடைய சொந்த அண்ணன் என்னைத் தனியாகத் தவிக்கவிட்டுச் சொல்லிக் கொள்ளாமல் போனபோது கூட எனக்குக் கோபம் வரவில்லையே! இப்போது எனக்குச் சம்பந்தமற்ற யாரோ ஒருவர் தன் சொந்தக் காரியமாகப் பம்பாய் போய்விட்டார் என்பதற்காகக் கோபம் வருவானேன்?’ பார்வதிக்கு வேதாந்தம் சொன்ன குறள் நினைவுக்கு வந்தது.
"காணுங்காற் காணேன் றவராய
காணாக்காற் காணேன் றவறல்லவை”
விமானத்தில் போய்க்கொண்டிருந்த சேதுபதியின் உள்ளத்திலும் அமைதியில்லை. ஊரை விட்டுப் புறப்படும் போது அவர் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டுதான் புறப்பட்டார். ஆனாலும் பார்வதியிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்தது பெரும் குறையாகத் தோன்றியது அவருக்கு. அடுத்த கணம் 'பார்வதிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவளிடம் நான் ஏன் சொல்லிக் கொள்ள வேண்டும்?' என்று தமக்குத் தாமே கேட்டுக்கொண்டார்.
அவர் உள்ளத்தில் அமைதியில்லை. பார்வதியைப் பற்றியே மீண்டும் மீண்டும் எண்ணமிட்டவராக விமானத் தின் பலகணி வழியாக விண்வெளியை வெறிச்சிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
------------
தொடரும்