Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 15 - சாவி
''பாரதி! பரீட்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் கணக்கில் நீ அவ்வளவு 'வீக்' இல்லை. ஆகையால் இன்றுமுதல் உனக்கு ஸயன்ஸ் பாடம் சொல்லித் தரப் போகிறேன். எங்கே, ஸயன்ஸ் புஸ்தகம் கொண்டு வந்திருக்கிறாயா? அதிலிருந்து சில கேள்விகள் கேட்கப் போகிறேன்'' என்றாள் பார்வதி.
ஸயன்ஸ் என்றதுமே பாரதியின் வயிற்றில் 'பகீர்' என்றது. கணக்குக்கு அடுத்தபடியாக அவளுக்குப் பிடிக்காத 'சப்ஜெக்ட்' அதுதான். அன்று பாரதி ராஜாவுடன் சினிமாவுக்குப் போகத் திட்டம் போட்டு வைத்திருந்தாள். அந்த நேரத்திலா ஸயன்ஸ் பாடம் படிக்கத் தோன்றும்? படு 'போர்' ஆயிற்றே !
''காலையிலிருந்தே எனக்குத் தலைவலி தாங்கவில்லை அம்மா! அத்துடன் இன்று நான் ஸயன்ஸ் புத்தகமும் கொண்டுவர மறந்து போனேன்'' என்றாள் பாரதி.
”மாத்திரை கொடுக்கிறேன் அதைச் சாப்பிட்டுவிட்டு இப்படிக் கொஞ்ச நேரம் படுத்துக் கொண்டிரு. ராஜா வந்ததும் உன்னைக் கொண்டுபோய் வீட்டில் விட்டு வரச் சொல்கிறேன்.......”
”கல்லூரியிலிருந்து புறப்படும்போதே சொல்வதற்கென்ன? உன்னை அப்போதே வீட்டில் கொண்டுபோய் விட்டிருப்பேனே'' என்றாள் பார்வதி.
''அப்போது ராஜாவைச் சந்திக்க முடியாதே!'' என்று பாரதி கூறவில்லை. எண்ணிக் கொண்டாள்.
ஸயன்ஸ் புத்தகம் கொண்டு வராததற்காகத் தன்னை பிரின்ஸிபால் கோபிப்பான் என எதிர்பார்த்த பாரதிக்கு பார்வதியின் உபசரணைகளும், அன்பு மொழிகளும் வியப்பை அளித்தன.
சேதுபதி பம்பாயிலிருந்து எப்போது திரும்பி வருவார் என்பதை அறிந்து கொள்ளவே பார்வதி அவ்வாறு அன்பு பாராட்டினான். ஆனாலும் பாரதியிடம் அதைக் கேட்டுவிடும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லை. சகஜமாகக் கேட்பதுபோல் கேட்டுப் பார்க்கலாமா? ஊஹும் கூடாது.
'அப்பா, நீங்கள் எப்போது வருவீர்கள் என்று பிரின்ஸி பால் விசாரித்தார்' என்று பாரதி தன் தந்தையிடம் கூறினால் அவர் என்ன எண்ணிக் கொள்வார்? அவர் வருகையில் நான் அக்கறை கொண்டிருப்பதாக அல்லவா நினைப்பார். 'போய் வருகிறேன்' என்று ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகாதவரைப்பற்றி நான் ஏன் விசாரிக்க வேண்டும்? அவரிடம் எனக்கு அக்கறை இருப்பதாக ஏன் காட்டிக் கொள்ள வேண்டும்? ஆனாலும் அவளால் சேதுபதியைப் பற்றி எண்ணாமல் இருக்க முடியவில்லை.
வெகு நேரம் தனக்குத்தானே குழம்பிக் கொண்டிருந்த பார்வதி, கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தாள். பாரதியை மெதுவாக விசாரிக்கத் தொடங்கினாள்.
""பாரதி! உனக்கு அடிக்கடி தலைவலி வருவது உண்டா ?”