கல்லூரித் தலைவி என்ற முறையில் என்னுடைய கடமை இத்துடன் முடிவடைகிறது.
''பார்வதி.”
கடிதத்தைப் படித்து முடித்ததும் பார்வதியின் முகத்தில் பெருமிதம் நிலவியது.
மறுநாள் காலை. வழக்கத்தைக் காட்டிலும் கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து காலைப் பத்திரிகையின் வரவுக்காகக் காத்திருந்தாள் பார்வதி. காரணம் அன்று திங்கட்கிழமை. ஞாயிற்றுக்கிழமையே அவர் வரப்போவதாகப் பாரதி கூறினாளே! நேற்று அவர் வந்துவிட்டிருப்பாரோ? ’திருவாளர் சேதுபதி பம்பாயிலிருந்து திரும்பினார்' என்ற செய்தி பத்திரிகையில் வெளியாகியிருக்குமல்லவா?
பத்திரிகை வந்தது. அவள் எதிர்பார்த்த செய்தியும் அதில் இருந்தது!
அந்தச் செய்தியைக் கண்டதும், பார்வதியின் உட லெங்கும் இதற்கு முன் அனுபவித்தறியாத உணர்ச்சி அலை பரவியது.
'அவர் வந்துவிட்டார் என்பதில், எனக்கு ஏன் இத்தனை மகிழ்ச்சி? அவரைச் சந்தித்து ஒரு யுகமே ஆகிவிட்டது போல் அல்லவா தோன்றுகிறது? அவரைப் பார்க்கச் செல்லலாமா?’
எந்தக் காரணத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அவர் வீட்டுக்குச் செல்வேன்? அதிக வேலை இருக்கிறது. மாலை வேளைகளில் இனி வரமுடியாது' என்று கடிதம் எழுதி அனுப்பிவிட்டு இப்போது அவர் வீட்டுக்குப் போய் நின்றால் என்னைப்பற்றி என்ன எண்ணிக்கொள்வார்?
எது வேண்டுமானாலும் எண்ணிக் கொள்ளட்டும். என்னால் இனி ஒரு கணமும் அவரைப் பாராமல் இருக்க முடியாது. பார்வதி உறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
அன்று மாலை கல்லூரி முடிந்ததுதான் தாமதம். வழக்கமாக வீடு நோக்கிச் செல்லும் பார்வதியின் கார், அன்று சேதுபதியின் வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
"எங்க வீட்டுக்காக போறீங்க மேடம்?'' என்று கேட்டாள் காரில் உட்கார்ந்திருந்த பாரதி.
"ஆமாம்" உறுதியாக வெளி வந்தது பார்வதியின் பதில்.
காரணம் கேட்கும் அளவுக்குத் துணிவு இல்லாத பாரதி மெளனமாகி விட்டாள். ராஜாவைச் சந்திக்க முடியாதே என்று எண்ணியபோது அவளுக்கு வருத்தமாக இருந்தது.
பார்வதியின் கார் உள்ளே நுழைந்த சமயம், சேதுபதி தற்செயலாக வாசலிலேயே நின்று கொண்டிருந்தார்.
'ஒரு வேளை இன்று பார்வதி வந்தாலும் வரக்கூடும்’ என்று அவருடைய உள் மனம் சொல்லிக் கொண்டிருந்தது. சரியாகவே போய்விட்டது.
காரிலிருந்து இறங்கிய பார்வதியை முக மலர்ச்சியுடன் வரவேற்ற சேதுபதி, "வாருங்கள்.... வாருங்கள்........ பாரதி எப்படிப் படித்துக் கொண்டிருக்கிறாள்...'' என்று விசாரித்தார்.