(Reading time: 12 - 24 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 16 - சாவி

நீண்ட நேர அலங்காரத்திற்குப் பிறகு, மிகுந்த உற்சாகத்துடன், சேதுபதியைச் சந்திக்கப் போகிறோம் என்னும் குதூகலத்துடன், அவருடைய அந்தரங்கத்தை அறியப் போகும் ஆர்வத்துடன், இரண்டில் ஒன்று தெரிந்து கொண்டு விடுவதென்னும் திடமான தீர்மானத்துடன் அவருடைய வீட்டுக்குப் புறப்பட்ட பார்வதியை, ராஜாவின் பேரிடி போன்ற சொற்கள் நிலைகுலையச் செய்துவிட்டன. ஒரு கணம் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

சேதுபதியிடம் எனக்குள்ள அக்கறையைப் புரிந்து கொண்டே ராஜா இப்படிப் பேசியிருக்கிறான். கடந்த சில நாட்களாக என்னுடைய போக்கில் ஏதோ ஒரு மாறுதல் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அதனாலேயே இன்று நான் வெளியே போகும் நேரத்தில் என்னைத் தடுத்து நிறுத்தி, 'பிக்விக் பேபர்ஸ்' பற்றிப் பிரஸ்தாபித்து, மறைமுகமாக என்னைத் தாக்கியிருக்கிறான் என்று ஊகித்த பார்வதி, அடுத்த கணமே சேதுபதியைச் சந்திக்கும் எண்ணத்தைக் கைவிட்டவளாய் மாடிப்படிகளை நோக்கி நடக்கலானான்.

அவள் உள்ளம் குழம்பியது. உடல் பதறியது. கால்கள் தடுமாறின. கண்கள் கலங்கிச் சிவந்தன. தட்டுத் தடுமாறிய படியே மாடியை அடைந்து தன் அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள். அங்கே கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டபோது, தன் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பது தெரிந்தது. தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கினாள் பார்வதி.

ஆம்; பார்வதிக்காக, அவள் பரிதாப நிலைக்காக இந்த உலகத்தில் வேறு யாருமே இல்லை.

உடல் சோர்ந்து, உள்ளம் கசந்து, உறுதி தளர்ந்து, திட்டங்கள் தகர்ந்து, தட்டுத் தடுமாறி நிலை குலைந்து போன பார்வதி, நிற்கும் சக்தியற்றவளாகிப் படுக்கையில் சாய்ந்து விட்டாள்.

இனி அவள் சேதுபதியைச் சந்திக்க விரும்பவில்லை. சில நிமிடங்களுக்கு முன் வரை இருந்த அந்த ஆசையை இப்போது தன் உள்ளத்திலிருந்தே கெல்லி வீசி எறிந்து விட்டாள்.

'அவர் பதில் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. என்னை நேசிப்பதாகச் சொன்னால் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன். அவர் இதயத்தில் எனக்கு இடமே இல்லை என்று கூறினாலும் அந்த அதிர்ச்சியையும் திடமாக ஏற்றுக் கொள்வேன். ஆனால் இரண்டில் ஒன்று முடிவாகத் தெரிந்து விட வேண்டும். மனத்திற்குள்ளாகவே மறைத்து வைத்துக் கொண்டு என்னால் இனி வேதனைப்பட முடியாது. இன்று முடிவு தெரிந்துவிட வேண்டும். அப்போதுதான் எனக்கு நிம்மதி ஏற்படும்' என்ற தீர்மானத்துடன் புறப்பட்ட பார்வதிக்கு இந்த இரண்டும் கெட்ட நிலை மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது.

படுக்கையில் சாய்ந்தபடியே யோசிக்கலானாள். ராஜா வின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளில் பயங்கரமாக ஒலித்தன.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.