'கிழவனுக்கும் கிழவிக்கும் காதலாம்!'
யாரோ ஓர் ஆசாரியர், ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதோ எங்கேயோ, தமாஷக்காக எழுதிய ஒரு சின்ன விஷயத்தையே ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை யென்றால், தன் சொந்த அத்தை, தாய்போல் இருந்து, தன்னைப் பாசத்துடன் போற்றி வளர்த்த அத்தை, இத்தகைய எண்ணம் கொண்டிருக்கிறாள் என்பதை அறிய நேரிடும்போது எத்தகைய சீற்றம் கொள்வான்? ஐயோ, அதை எண்ணிப் பார்க்கவே பயமாக இருந்தது பார்வதிக்கு. இதுகாறும் தன் மனத்துக்குள் இம்மாதிரி ஓர் எண்ணம் வைத்திருந்ததாகவே ராஜா அறியக் கூடாது. இப்போதே மறந்துவிடுகிறேன். மறந்துவிட்டு எப்போதும்போல் குமாரி பார்வதியாகவே, பிரின்ஸிபால் பார்வதியாகவே வாழ்ந்து விடுகிறேன், உள்ளத்தில் புகுந்து என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட எண்ணத்தை அவ்வளவு எளிதாகக் களைந்து விடக் கூடியதாயிருந்தால் அது உண்மையான பற்றுதலா யிருக்க முடியுமா ?
'ஆமாம், நீ ஏன் ராஜாவுக்காக உன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்.' பார்வதியின் உள் மனம் அவளைக் கேட்டது.
"ராஜாவை நீ உன் சொந்த மகனைப்போல் பாசம் வைத்து வளர்த்தாய். இப்போது அவன் பெரியவனாக வளர்ந்து, உலகம் தெரிந்தவனாக, நல்லது கெட்டது புரிந்தவனாக ஆகியிருக்கிறான். இத்தனை வயது கடந்த பிறகு, நீ ஒருவரின் நட்பை விரும்புகிறாய், உறவை நாடுகிறாய் என்று அவன் அறிய நேரிட்டால் அவன் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டான், உன் உறவையே முறித்துக்கொண்டு உன்னை அநாதையாக்கிவிட்டு உன் முகத்திலேயே விழிக்க விருப்பமின்றி, உன்னைப் பிரிந்து போய்விடுவான்' என்றது இன்னொரு குரல்.
'போகட்டுமே; எனக்கென்று ஒரு வாழ்வு கிடையாதா?'
'உண்டு; ஆனால் அதைக் காலம் கடந்து விரும்புகிறாய்! இப்போது ராஜாவைப் புறக்கணித்துவிட்டுச் சேதுபதியை நீ மணந்துகொண்டால் உலகம் உன்னைச் சுயநலக்காரி என்று தூற்றும்.'
கடைசியில் பார்வதி ஒரு முடிவுக்கு வந்தாள். சேதுபதியை அன்றோடு, அந்தக் கணத்தோடு மறந்துவிடுவது என்பதே அந்த முடிவு.
அப்போது கடிகாரத்தில் மணி ஒன்பது அடிக்கும் ஓசை அவள் காதில் விழுந்தது.
'இன்னும் அரை மணி நேரத்திற்குள் காலேஜுக்குப் புறப்பட வேண்டும்' என்ற கடமை உணர்ச்சியால் உந்தப் பட்டவள், மாடியிலிருந்து கீழே இறங்கிச் சென்றாள்.
அத்தையின் வரவுக்காகத் தினமும் காத்திருக்கும் ராஜாவை இன்று காணவில்லை. அவன்