(Reading time: 18 - 36 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

இதயமே வெடித்து விடும் போல் தோன்றியது.

வேதனையைச் சகித்துக் கொண்டு மௌனத்தைக் கலைத்துக்கொண்டு அவர்தான் பேசினார்.

”சாப்பிட்டீர்களா?''

அந்தக் கேள்வியில் எல்லா வேதனைகளும் அடங்கிக் கிடந்தன.

"உங்கள் கையால் அதை எடுத்துக் கொடுங்கள்'' என்று சொல்லத் துடித்தது அவள் இதயம். ஆனால் வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. துக்கம் நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டி நெஞ்சை அடைத்துக் கொள்ள, கையை நீட்டினாள் பார்வதி.

'மாதுளம்பழம் எனக்குப் பிடிக்கும் என்னும் ரகசியத்தை எப்படியோ அறிந்துகொண்டு இந்தப் பழங்களை எனக்காக ஆசையோடு வாங்கி வைத்திருக்கிறார். நான் இவற்றைச் சாப்பிட்டால் அவர் அன்பை ஏற்றுக்கொண்டதாக ஆகும். அவரை நான் மறந்து வாழ விரும்புகிறேன்; அதைப்போல் அவரும் என்னை மறந்து வாழ வேண்டுமென்று எண்ணு கிறேன். அவர் செலுத்தும் அன்பை நான் அங்கீகரித்தால் அது பெரும் விபரீதத்தில் கொண்டு போய்விடும். ஆகவே இந்தப் பழங்களை நான் தொட மாட்டேன். தொடவே மாட்டேன்’. பார்வதியின் வைராக்கியம், திடசித்தம், தீர்மானம் எல்லாம் சேதுபதியைக் கண்டபோது தவிடு பொடியாகத் தகர்ந்து போயின.

பார்வதி கை நீட்டிக் கேட்டபோது சேதுபதியின் முகம் மலர்ந்தது. சட்டென அவர் அந்தப் பழங்களில் ஒன்றை எடுத்துத் தோலை அகற்றி அதனுள் புதைந்து கிடந்த கெம்புக் கற்கள் போன்ற முத்துகளை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

'இத்தனை நாளும் இவர் அன்புக்காக நான் காத்திருந்தேன். இப்போது நானே இவருடைய அன்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்.'

இவ்வாறு எண்ணிய பார்வதிக்கு துக்கம் நெஞ்சை அடைத்தது.

மீண்டும் சேதுபதி முத்துகளை எடுத்துக் கொடுத்த போது 'போதும்' என்று கையசைத்தாள் பார்வதி.

"ஏன்? பழத்தில் ருசி இல்லையா?

"ருசி இருக்கிறது, பசி இல்லை.''

பார்வதியின் பதிலில் வழக்கமாக உள்ள உற்சாகம் இல்லை.

“ஏன் இப்படிப் பேசுகிறாள்? ஒருவேளை உடல் நிலை சரியில்லாதது காரணமா-யிருக்குமோ?” சேதுபதி ஒரு கணம் சிந்தித்தார். பிறகு சட்டென ஒரு முடிவுக்கு வந்தவர்போல், ''சரி; நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். நான் அப்புறம் வந்து பார்க்கிறேன்'' என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

பார்வதி அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவருடைய

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.