”கொஞ்சம் ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு உடம்பு குணமாகும் வரை என்னை இங்கேயே இருந்து கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறான், என் அண்ணா...'' என்றாள் காமாட்சி.
"ஓ! அப்படியானால் அவரை யார் கவனித்துக் கொள் வார்கள்?'' - பார்வதி கேட்டாள்.
"வீட்டிலே சமையல்காரன் இருக்கிறான். பார்த்துக் கொள்கிறான். நான் அங்கே இருந்தாலும் என்னை ஒரு வேலையும் செய்ய விடமாட்டான். நீ பேசாமல் உட்கார்ந்து கொண்டிரு. வேலைக்காரர்கள் கவனித்துக் கொள்வார்கள்? என்பான். பிறர் துன்பப்படுவதை அவன் சகிக்கவே மாட்டான், இளகிய மனசு அவனுக்கு. இதுவரை என்னை அவன் யார் வீட்டிலும் தங்க அனுமதித்ததில்லை. அப்படிப்பட்டவன் என்னை இங்கே அனுப்பி உங்களைக் கவனித்துக் கொள்னச் சொல்லியிருக்கிறான் என்றால் அது தங்கள் மீது அவனுக் குள்ள அக்கறையையே காட்டுகிறது'' என்றாள் காமாட்சி.
சேதுபதியைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள விரும்பினாள் பார்வதி. ஆயினும் அந்த விருப்பத்தை அவள் வெளிப் படையாகக் காட்டிக் கொள்ளாமல் மறைமுகமாகச் சில கேள்விகள் கேட்டாள்.
”உங்க அண்ணா ரெம்பப் பிடிவாதக்காரரோ?” பார்வதி குழந்தை போல் கபடமின்றிச் சிரித்தபடியே கேட்டாள்.
”அதை ஏன் கேட்கிறீர்கள்? சின்ன வயசிலிருந்தே பிடிவாதக் குணம் அதிகம். அவன் அப்பா ஒரு நாள் ஏதோ கோபமாகச் சொல்லி விட்டார் என்பதற்காக வீட்டை விட்டே வெளியேறி விட்டான். அப்புறம் எப்படியோ கஷ்டப்பட்டுப் படித்துத் தானே விழுந்து எழுந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்தான். இப்போது லட்சக் கணக்கில் பணத்தைக் குவிக்கிறான். ம்.. என்ன குவித்து என்ன பிரயோஜனம்” பெருமூச்சுவிட்டாள் காமாட்சி.
”ஏன் இப்போது அவருக்கு என்ன குறைவு?”
”ஒரு குறைவுமில்லை. சரஸ்வதியோடு வாழக் கொடுத்து வைக்காத குறைதான்.... பாரதியைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குள்ளாகவே அவள் இறந்து விட்டாள். பாவம் சரஸ்வதியின் மீது அவன் உயிரையே வைத்திருந்தான். அவள் மறைந்த பிறகு, ஆறு மாதம் சரியாகக் கூடச் சாப்பிட வில்லை. எந்நேரமும் பித்துப்பிடித்த மாதிரி கலங்கி நிற்பான். அப்போதுதான் அந்த வீட்டின் முழுப் பொறுப்பையும் நான் வந்து ஏற்றுக்கொண்டேன். அண்ணாவின் நிலை எனக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. ஒரு நாள் அவன் தனியாக உட்கார்ந்திருந்த சமயம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன்.
"நீ ஏன் அண்ணா இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?'' என்று கேட்டேன்.