இதைக் கேட்டபோது பார்வதியின் இதயம் மகிழ்ச்சியில் திளைத்தது.
"அப்படியா... அவர் வாயால் புகழக் கூடிய அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன்?”
சேதுபதி தன்மீது அளவற்ற அன்பு கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த பிறகு பார்வதியின் உள்ளத்தில் நிம்மதி பிறந்தது. அந்த நிம்மதியுடன் மன அமைதியுடன் அன்றிரவு தூங்கி எழுந்தாள் பார்வதி.
மறுநாள் காலை. பார்வதி கட்டிலில் படுத்தபடியே சிந்தித்துக் கொண்டிருந்தாள். வீட்டில் உள்ள ஜன்னல் களையும் கதவுகளையும் என்ன தான் மூடி வைத்தாலும் காற்று உள்ளே வராமல் இருக்கிறதா? மனத்தை எவ்வளவு உறுதிப் படுத்திக் கொண்டாலும் பலவீனமான சிந்தனைகள் வந்து கொண்டுதானிருக்கின்றன.
அவரை மறந்துவிட அவள் எவ்வளவோ முயன்றுதான் பார்த்தாள். ஆனால் முடிய-வில்லை. பூவின் நிறத்தையும் அழகையும் எளிதில் மறந்துவிடலாம். ஆனால் அதனுடைய மணத்தை மறக்க முடிவதில்லையே!
”அம்மா, கல்லூரியிலிருந்து ஏழெட்டுப் பேர் வந்திருக்கிறார்கள் தங்களைப் பார்க்க வேண்டுமாம். கீழே வராந்தாவில் காத்திருக்கிறார்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தாள் ஞானம்.
”மாணவிகள் மட்டுமா, புரொபஸர்களும் கூடவா?'' என்று கேட்டாள் பார்வதி.
'அதெல்லாம் எனக்குத் தெரியவில்லை' என்றாள் ஞானம்.
பார்வதியின் நெற்றியில் சுருக்கம் கண்டது.
”சரி, நீ போய் அவர்களை மேலே வரச் சொல்...''
தொடரும்